Designed by Iniyas LTD
காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் தமிழ் தேசிய கூட்டமைப்பின் மீது கடுமையான விமர்சனம்
காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகள் இன்று கிளிநொச்சியில் ஊடக சந்திப்பொன்றை ஏற்பாடு செய்திருந்தனர். குறித்த ஊடக சந்திப்பு இன்று மாலை 3.30 மணியளவில் திரேசா மண்டபத்தில் இடம்பெற்றது. யாழ்ப்பாணம், மன்னார், கிளிநொச்சி மாவட்டங்களை சேர்ந்த காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகள் குறித்த ஊடக சந்திப்பில் கருத்து தெரிவித்தனர்.
குறித்த ஊடக சந்திப்பில் கலந்து கொண்டு நால்வர் கருத்து தெரிவித்தனர். எதிர்வரும் 25ம் திகதி கிளிநொச்சியில் இடம்பெறவுள்ள மாபெரும் போராட்டத்திற்கு அனைத்து அரசியல்வாதிகளும், சிவில் அமைப்புக்களும், பொது மக்களும் இணைந்து பலத்தை காண்பிக்க வேண்டும் என தெரிவித்தனர்.
காணாமல் ஆக்கப்பட்டவர்களின் போராட்டம் தொடர் போராட்டமாக ஆரம்பித்து நாளை 2 ஆண்டுகளை எட்டவுள்ளதாகவும், இன்றுவரை மக்கள் போராடியவாறே உள்ளதாகவும், தமக்கு எந்தவித தீர்வுகளும் வழங்கப்படவில்லை எனவும் அவர்கள் தெரிவிக்கின்றனர். இந்த நிலையில் தமிழ் தேசிய கூட்டமைப்பினரும் எவ்வித முயற்சிகளையும் மேற்கொள்ளவில்லை எனவும் ஆதங்கம் வெளிட்ட அவர்கள், வெறுமனே பாராளுமன்றங்களில் சென்று பேசுவதாக கூறி காலத்தை வீண் விரயம் செய்துள்ளதாகவும் கடுமையாக சாடினர்.
அண்மையில் கிளிநொச்சியில் சிங்கள பிரதமர் வருகைதந்திருந்த வேளை நடந்தவற்றை மறப்போம் மன்னிப்போம் என தெரிவித்தமை தொடர்பில் காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகள் கடுமையான விமர்சனத்தை முன்வைத்தனர். ரணில் கிளிநொச்சிக்கு ஒருதடவை வருகை தந்தபோது, மகிந்தவின் குடும்பத்தில் யாராவது காணாமல் ஆக்கப்பட்டிருந்தால்தான் அவர்களிற்கு வலி தெரியும், உங்களின் வலிகளை நான் உணர்கின்றேன். உங்கள் பிள்ளைகள் ரகசிய முகாம்களில் தங்கவைக்கப்பட்டுள்ளனர். என்னை பதவியில் அமர்த்தினால் அந்த முகாம்களை இனம்கண்டு அவர்களை விடுவிப்பேன் என கூறியிருந்தார்.
அன்று எமது பிரதேசத்தை சேர்ந்த காணாமல் போன மகனை விடுவித்து தர முயற்சி செய்யுமாறு தெரிவித்த ரணிலின் காலை பிடித்து கதறி அழுதிருந்தார். அன்று எமக்கு தீர்வு பெற்று தருவதாக கூறிய ரணில் பதவியில் ஏறியதும், பலாலியில் வைத்து எமது மண்ணில் உங்கள் பிள்ளைகள் கொல்லப்பட்டுள்ளனர். அவர்கள் உயிரோடு இல்லை என தெரிவித்திருந்தார்.
இவ்வாறு செயற்பட்ட ரணில் கிளிநாச்சியில் மறப்போம் மன்னிப்போம் என தெரிவித்த கருத்து தொடர்பில் எமது அரசியல்வாதிகளும் மௌனமாக இருந்தமை தொடர்பில் கடும் அதிருப்தி வெளியிட்டனர். இதேவேளை தமிழ் தேசிய கூட்டமைப்பின் அண்மைக்கால செயற்பாடுகள் தொடர்பில் கடுமையான விமர்சனங்களையும் முன்வைத்திருந்தமை குறிப்பிடதக்கதாகும்.