அ.தி.மு.க. சட்டமன்ற உறுப்பினர்களின் கூட்டம் மே மாதம் 22ஆம் தேதி கூட்டப்படுகிறது என அக்கட்சியின் பொதுச் செயலாளர் ஜெயலலிதா அறிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் இன்று வெளியிட்டிருக்கும் அறிக்கையில், “அதிமுக சட்டமன்ற உறுப்பினர்கள் கூட்டம் வருகின்ற 22.05.2015 வெள்ளிக்கிழமை காலை 7 மணிக்கு சென்னை, ராயப்பேட்டை, அவ்வை சண்முகம் சாலையில் உள்ள தலைமைக் கழகத்தில் நடைபெறும்.
இந்தக் கூட்டத்தில் கழக சட்டமன்ற உறுப்பினர்கள் அனைவரும் தவறாமல் கலந்து கொள்ள வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்” எனக் குறிப்பிட்டுள்ளார்.
சொத்துக் குவிப்பு வழக்கிலிருந்து முன்னாள் முதல்வர் ஜெயலலிதா கடந்த 11ஆம் தேதியன்று நீதிமன்றத்தில் விடுவிக்கப்பட்டார். ஆனால், அதற்குப் பிறகும் அவர் யாரையும் அதிகாரபூர்வமாக இதுவரை சந்திக்கவில்லை.
ஜெயலலிதா மீண்டும் முதலமைச்சராக எப்போது பதவியேற்கப்போகிறார் என்பது குறித்த விவாதங்களும் தொடர்ந்து நடந்துவந்தன.
இந்த நிலையில், இந்த அறிக்கையை ஜெயலலிதா வெளியிட்டுள்ளார்.