இங்கிலாந்து கடற்படையினரால் சிறைப்பிடிக்கப்பட்ட தமிழக மீனவர்களில் 14 பேர் விடுவிக்கப்பட்டுள்ளதாகத் தெற்காசிய மீனவர் தோழமை அமைப்பு தெரிவித்துள்ளது.
நவம்பர் 21ஆம் தேதி கொச்சித் துறைமுகத்திலிருந்து 14 மீனவர்கள் ஆழ்கடல் மீன் பிடிப்புக்குச் சென்றனர். இதில் 13 பேர் குமரி மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள். கடந்த 5ஆம் தேதி இந்திய பெருங்கடல் பகுதியில் இங்கிலாந்துக்குச் சொந்தமான தியாகோ கிராசியா தீவின் அருகே அவர்கள் மீன் பிடித்துக் கொண்டிருந்த போது எல்லை தாண்டியதாகக் கூறி இங்கிலாந்து கடலோரக் காவல்படையினரால் கைது செய்யப்பட்டனர். இதே போல டிசம்பர் 2ஆம் தேதி திருவனந்தபுரம் வெளிங்கம் துறைமுகத்திலிருந்து மீன் பிடிக்கச் சென்ற 11 தமிழக மீனவர்களும் 7ஆம் தேதி தியாகோ தீவின் அருகே இங்கிலாந்து கடலோரக் காவல்படையால் கைது செய்யப்பட்டனர்.
டிசம்பர் 17 ஆம் தேதி 83 தமிழக மீனவர்கள் கைது செய்யப்பட்டனர். இதையடுத்துக் கைது செய்யப்பட்ட மீனவர்களை விடுவிக்கக் கோரி தெற்காசிய மீனவர் தோழமை அமைப்பும், மீனவர்களின் குடும்பத்தினரும் கோரிக்கை விடுத்ததை அடுத்து 14 தமிழக மீனவர்கள் விடுவிக்கப்பட்டுள்ளனர். ஒரு படகு விடுவிக்கப்பட்டது. இந்த நிலையில் சிறையிலிருக்கும் எஞ்சிய 94 மீனவர்களையும், 8 படகுகளையும் இங்கிலாந்து விடுவிக்க வேண்டுமென்று மீனவ அமைப்புகள் கோரிக்கை விடுத்துள்ளன.