இந்தியா :ஆந்திராவில் மீன் மழை – ஆகாயத்திலிருந்து நூற்றுக்கணக்கான மீன்கள் கொட்டின!

இந்தியாவிலுள்ள ஆந்திரா, தெலுங்கானா பகுதிகளில் கடந்த 3 நாட்களாக பரவலாக மழை பெய்து வருகிறது. ஆனால் நேற்று இரவு ஆந்திராவில் பெய்த மீன் மழை அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளது. ஆந்திர மாநிலம் கிருஷ்ணா மாவட்டம் நந்தி காமா மண்டலத்தில் நேற்று முன்தினம் இரவு 8 மணிக்கு தொடங்கிய மழை நள்ளிரவு வரை நீடித்தது.

இந்நிலையில் கொள்ளமுடி, பல்லகிரி ஆகிய கிராமங்களில் விவசாயிகள் நேற்று காலை வழக்கம் போல் தங்கள் வயல்களுக்கு சென்றனர். அப்போது இரவு பெய்த மழையில் வயல்களில் தண்ணீர் தேங்கி இருந்தது. அதில் ஏராளமான மீன்கள் உயிருடன் நீந்தியது. நூற்றுக்கணக்கான மீன்கள் தரையிலும் சிதறி கிடந்தது. சுமார் 50 ஏக்கர் பரப்பில் மீன்கள் கிடந்தது.

அதனை விவசாயிகள் போட்டி போட்டு அள்ளினர். உயிருடன் நீந்திய மீன்களை கட்டையால் அடித்து கொன்று பிடித்தனர். மாலை வரை இந்த மீன் வேட்டை நடந்தது. ஒவ்வொரு மீனும் அரைக்கிலோ எடையுடன் காணப்பட்டது.

மேலும் இரவு பெய்த மழையில் வானத்தில் இருந்து மீன்கள் கொட்டியதாக கிராம மக்கள் கூறினார்கள். ஜராவதம் கிராமத்தில் மழை பெய்தபோது சாலையில் மீன்கள் கொட்டியதாக நேரில் பார்த்த நரசிம்மராவ் தெரிவித்தார். மீன் மழை பெய்த தகவல் ஆந்திராவில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. ஏராளமான மக்கள் கொள்ளமுடி கிராமத்துக்கு வந்து வானத்தில் இருந்து கொட்டிய மீன்களை பார்த்து அதிசயித்தனர். இந்த மீன் வாலாக வகையை சேர்ந்தது என்று கூறப்படுகிறது.

மீன் மழை பெய்வது அதிசயமான ஒன்றுதான் என்று விசாகப்பட்டினத்தை சேர்ந்த சுற்றுச்சூழல் நிபுணர் முரளி கிருஷ்ணா தெரிவித்தார். அவர் கூறியதாவது:–

ஆகாயத்தில் அடர்த்தியான மேகங்கள் ஏற்பட்டு நகரும் போது சுழல் காற்று ஏற்படும். அந்த சூழல் காற்று யானையின் தும்பிக்கை போல கீழே இறங்கும். கடல் மற்றும் நீர் நிலை மேல் அந்த சுழல் காற்று ஏற்படும் போது நீரில் உள்ள மீன்கள், தவளைகள் போன்றவைகள் இழுக்கப்பட்டு மேலே அடித்துச்செல்லும். சுழல் காற்றின் சீற்றம் குறையும் போது அதனால் ஈர்க்கப்பட்ட மீன்கள் தரையில் விழுந்து சிதறுகிறது.

அமெரிக்காவில் இது போன்ற மீன் மழை அடிக்கடி நிகழ்வது உண்டு. வட மாநிலத்தில் கூட மீன் மழை பெய்து உள்ளது. ஆனால் தென்இந்தியாவில் பெய்தது ஆச்சரியமாக உள்ளது. ஆந்திராவில் உள்ள கிருஷ்ணா நதியில் மேக சுழல் காற்று ஏற்பட்டு மீன்கள் மேலே அடித்துச் செல்லப்பட்டு மழையாக கொட்டி இருக்கலாம் எனத் தெரிகிறது. இவ்வாறு முரளி கிருஷ்ணா கூறியுள்ளார்.

ஆந்திராஇந்தியாசுற்றுச்சூழல்சுழல் காற்றுதெலுங்கானாமீன் மழைமீன்கள்முரளி கிருஷ்ணாமேகங்கள்விவசாயிகள்
Comments (0)
Add Comment