விஸ்வா அந்த பகுதியில் உள்ள பள்ளியில் 2-ம் வகுப்பும், தனஸ்ரீ எல்.கே.ஜி.யும் படித்து வந்தனர். இசக்கி வேலை செய்த பணத்தை வீட்டிற்கு கொடுக்காமல் மதுக்குடித்து செலவு செய்து வந்துள்ளார். இதனால் மகேஸ்வரி அருகில் உள்ள வீடுகளுக்கு சென்று வேலை செய்து குடும்பத்தை நடத்தி வந்தார்.
இந்நிலையில் குடிபோதையில் வீட்டிற்கு வரும் இசக்கி மகேஸ்வரியின் நடத்தை குறித்து பேசி அடிக்கடி தகராறு செய்து வந்துள்ளார். மேலும் மகேஸ்வரி செல்போனில் பேசுவது குறித்தும் சந்தேகப்பட்டுள்ளார். இதன் காரணமாக கணவன்- மனைவிக்கு இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது.
இன்று அதிகாலையும் கணவன்- மனைவிக்கு இடையே தகராறு ஏற்பட்டது. அப்போது மகேஸ்வரியை தகாத வார்த்தைகளால் பேசிவிட்டு இசக்கி வீட்டைவிட்டு வெளியே சென்று விட்டார். சம்பாதிக்கும் பணத்தை குடித்தே அழிக்கும் கணவர், தனது நடத்தை மீது சந்தேகப்பட்டு பேசியது மகேஸ்வரிக்கு மனவேதனையை ஏற்படுத்தியது.
இனியும் வாழ்ந்து என்ன பயன் என்று நினைத்த அவர் தற்கொலை செய்யும் முடிவிற்கு வந்தார். தான் இறந்து விட்டால் தனது குழந்தைகள் 2 பேரும் அனாதையாகி விடுவார்கள் என்று நினைத்த மகேஸ்வரி, குழந்தைகளை கொன்று தானும் தற்கொலை செய்ய துணிந்தார்.
வீட்டில் இருந்த மண்எண்ணெயை எடுத்து தனது 2 குழந்தைகள் மீது ஊற்றிய மகேஸ்வரி தன்மீதும் மண்எண்ணெயை ஊற்றிக் கொண்டு தீவைத்தார். இதில் 3 பேரின் உடலிலும் தீப்பற்றி எரிந்தது. தீயின் வெப்பம் தாங்காமல் கதறிய குழந்தைகள் தாயை கட்டிப்பிடித்துக் கொண்டன. குழந்தைகளை இறுக்கிப்பிடித்துக் கொண்டு மகேஸ்வரியும் கதறினார்.
அவர்களின் அலறல் சத்தம் கேட்டும், வீட்டில் இருந்து புகை வருவதை பார்த்தும் அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் ஓடிச் சென்று வீட்டு கதவை உடைத்து மகேஸ்வரியையும், குழந்தைகளையும் மீட்க முயன்றனர். 3 பேரின் மீதும் தீ உக்கிரமாக எரிந்து கொண்டிருந்ததால் அவர்கள் அருகில் கூட செல்ல முடியவில்லை. சிறிது நேரத்தில் மகேஸ்வரியும், 2 குழந்தைகளும் சம்பவ இடத்திலேயே உடல் கருகி பரிதாபமாக இறந்தனர்.
இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்த குற்றாலம் போலீசார் அங்கு விரைந்து வந்து 3 பேரின் உடலையும் கைப்பற்றி தென்காசி அரசு ஆஸ்பத்திரிக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும் மகேஸ்வரி தனது குழந்தைகளை எரித்து, தானும் தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டது ஏன்? கணவருடன் தகராறு ஏற்பட்டதால் தற்கொலை செய்து கொண்டாரா? அல்லது வேறு ஏதும் காரணமா? என விசாரணை நடத்தி வருகின்றனர். குழந்தைகளுடன் தாய் தீக்குளித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் இலஞ்சி பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியது.