சுரேஷ்குமார் த/பெ ஞானசௌந்தரம் (வயது 37) என்பவர் ஈழத்திலிருந்து தனது மருத்துவ சிகிச்சைக்காக தமிழகத்தில் ஏதிலியாக வாழ்ந்து வந்தார் முதுகுத்தண்டு உடைந்ததால் இடுப்பின் கீழ் உணர்வற்று, சுயமாக தனது எந்தவொரு அன்றாட கடமைகளையும் செய்யமுடியாத நிலையில் சக்கர நாட்காலியிலேயே உள்ளார். இந்நிலையில் உள்ள ஒருவருக்கு கடந்த ஒன்றரை வருடங்களாக எந்தவொரு அடிப்படை வசதிகளும் இல்லாத நிலையில் உதவிக்கு யாருமற்ற நிலையில் திருச்சி சிறப்பு முகாமில் தடுத்து வைக்கப்பட்டுள்ளார்.
ஒரு மாற்றுத்திறனாளியை அடைத்து வைத்து அவரது உதவிக்கு எந்த வசதியையும் இந்த அரசாங்கம் செய்து தரவில்லை, கழிவறைக்கு செல்ல வேண்டும் என்றாலும் அடுத்தவர்களின் உதவியை எதிர்பார்த்து வாழ வேண்டிய சூழல் இருப்பதால் தனக்கு உதவியாளர் ஒருவரை நியமிக்க வேண்டும் என்று சுரேஷ்குமார் பலமுறை மனு அளித்துள்ளார். ஆனால் இதுவரை அவரது மனுவிற்கு அரசு தரப்பில் எந்தவிதமான பதிலும் அளிக்கப்படவில்லை. எனவே சுரேஷ்குமார் தனது சொந்த செலவில் தன்னை பராமரிப்பதற்காக ஒருவரை நியமித்துக்கொள்ளவாவது அனுமதிக்க வேண்டும் என்று கடந்த ஒன்றரை வருடங்களாக பல மனுக்கள் கொடுத்தும் எந்தவொரு நடவடிக்கையும் எடுக்கப்பட வில்லை.
இந்நிலையில் அடிப்படை வசதிகள் மற்றும் பராமரிப்புக்கு ஒருவரை ஒழுங்கு செய்து தரும்படியும் இல்லாதவிட்டால் முகாமுக்கு வெளியே சுயமாக வாழ அனுமதிக்கும் படி கோரிக்கை வைத்து கடந்த 10.07.2014 முதல் பட்டினிப்போராட்டம் தொடங்கியுள்ளார்.(12.07.2014) அன்று அகதிகளுக்கான தனித்துணை ஆட்சியர் அவர்கள் இதற்கான தீர்வுகள் எதுவும் சொல்லாமல் உண்ணாவிரதத்தினை கை விடுமாறும் இல்லாவிட்டால் கைது செய்வோம் என சுரேஷ்குமாரை எச்சரித்து சென்றுள்ளார். மேலும் இவரது பட்டினிப்போராட்டதினை கொச்சைப்படுத்தும் விதமாக குளிர் சாதன வசதியை கேட்டு உண்ணாவிரதம் இருப்பதாக அதிகாரிகள் தவறான தகவல்களை பத்திரிகைகளுக்கு கொடுத்துள்ளார்கள்.
இந்நிலையில் திருச்சி சிறப்பு முகாமில் தடுத்துவைக்கப்பட்ட சுரேஷ்குமார் நான்காவது நாளாக உண்ணாவிரதம் தொடர்ந்த நிலையில் நேற்றுக் காலை ஒன்பது மணிக்கு கைது செய்யப்பட்டுள்ளார். கைது செய்யப்பட்டுள்ள சுரேஷ்குமார் தற்பொழுது புழல் சிறைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளார்.
[youtube url=”https://www.youtube.com/watch?v=0ASxrxpi1q8″ width=”560″ height=”315″]