மட்டக்குளியில் கடந்த 23ஆம் திகதி இரவு பாதாள உலக குழுக்கள் இரண்டிற்கு இடையில் இடம்பெற்ற துப்பாக்கி சூட்டு சம்பவத்தில் 4 பேர் உயிரிழந்தனர். இந்த சம்பவம் இடம்பெற்று 48 மணித்தியாலங்கள் நிறைவடைவதற்கு முன்னர் 10 பாதாள உலக குழு உறுப்பினர்கள் மற்றும் கொலைக்கு பயன்படுத்தப்பட்ட ஆயுதங்கள் பொலிஸாரினால் மீட்கப்பட்டன.
சந்தேக நபர்களின் வாக்குமூலத்திற்கமைய இந்த நான்கு கொலைகளை மேற்கொண்ட பாதாள உலக குழு உறுப்பினர் ரொஷான் உட்பட 9 பேர் கடவத்தையில் அமைந்துள்ள ஆலயம் ஒன்றில் துப்பாக்கிளை மறைத்து வைத்து விட்டு, கப்புவா என்பவரின் மருமகனுக்கு சொந்தமான முச்சக்கரவண்டியில் அங்கிருந்து சென்றுள்ளனர்.
மேலும் ஒரு முச்சக்கர வண்டியை வாடகைக்கு எடுத்துக் கொண்ட சந்தேகநபர்கள் சுற்றுலா பயணம் ஒன்று செல்வதாக முச்சக்கர வண்டியின் சாரதியிடம் தெரிவித்து இரத்தினபுரி லெல்லாபிடிய பிரதேசத்திற்கு சென்றுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. பாதாள உலக குழு தலைவர் ரொஷானின் பாட்டி ஒருவரின் வீட்டிற்கு சந்தேக நபர்கள் சென்று பாட்டியிடமும் சுற்றுலா பயணம் ஒன்று வந்ததாக தெரிவித்துள்ளார். இதன் காரணமாக சந்தேகநபர்களுக்கு தங்குவதற்கு இடமளிக்கப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.