இந்த வழக்கு நீதிபதி லவ்லின் முன் விசாரணைக்கு வந்தபோது, சோனியா காந்தி, ராகுல்காந்தி உள்ளிட்டோர் நேரில் ஆஜராகினர். அப்போது, சோனியா தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் கபில் சிபல், குற்றம்சாட்டப்பட்ட சோனியா காந்தி, ராகுல்காந்தி உள்ளிட்டோருக்கு ஜாமீன் வழங்க கோரிக்கை விடுத்தார்.
அதேவேளையில், குற்றம்சாட்டப்பட்டவர்கள் வெளிநாடுகளுக்கு செல்லாத வகையில் அவர்களது பாஸ்போர்ட்டை முடக்கி வைக்க வேண்டும் என மனுதாரர் சுப்பிரமணியன் சுவாமி தரப்பில் வாதிடப்பட்டது.
சுப்பிரமணியன் சுவாமியின் கோரிக்கையை நிராகரித்த நீதிபதி லவ்லின், குற்றம்சாட்டப்பட்ட சோனியா காந்தி, ராகுல் காந்தி மற்றும் மேலும் 3 பேர், 50 ஆயிரம் ரூபாய் செலுத்தி சொந்த பிணையில் ஜாமீனில் செல்ல அனுமதியளித்தார்.
இதைத் தொடர்ந்து வழக்கு விசாரணை அடுத்தாண்டு பிப்ரவரி 20-ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது. நேஷனல் ஹெரால்டு பத்திரிகையின் சொத்துகளை சோனியா காந்தி, ராகுல்காந்தி உள்ளிட்டோர் அபகரித்ததாக குற்றம்சாட்டி, சுப்பிரமணியன் சுவாமி வழக்கு தொடர்ந்திருந்தார்.