குறித்த பிரதேசத்தில் இன்றைய தினம் (06.11.2024) காலை இடம்பெற இருந்த நடவடிக்கையே இவ்வாறு நிறுத்தப்பட்டுள்ளது.
சம்பவம் தொடர்பாக மேலும் தெரிய வருகையில்,
மக்களின் தனியார் காணி
மன்னார் பிரதேச செயலாளர் பிரிவில் உள்ள ஓலைதொடுவாய் வள நகர் பிரதேசத்தில் மக்களின் தனியார் காணிகளை அனுமதியின்றி அபகரித்து நடை முறைப்படுத்தும் கனிய வள மணல் அகழ்வுக்கான கூர்ப்பு ஆவணம் தயாரிக்கும் நடவடிக்கைக்காக இன்று புதன்கிழமை (06) மன்னார் மற்றும் தென் பகுதிகளில் உள்ள சுமார் 20 வரையிலான திணைக்கள அதிகாரிகள் வாகனங்களில் குறித்த பகுதிக்கு வருகை தந்துள்ளனர்.
சம்பவம் தொடர்பில் அதிகாரிகள் வருகை தருவதை அறிந்த அக்கிராம மக்கள், பொது அமைப்புக்கள் உள்ளடங்களாக நூற்றுக்கணக்கானோர் ஒன்று திரண்டு குறித்த பகுதிக்கு செல்ல முடியாது பாதையை தடுத்ததுடன் அதிகாரிகளுடன் முரண்பட்டனர்.
அத்துடன் சம்பவத்தை அறிந்து மன்னார் பிரஜைகள் குழு, மன்னார் மாவட்ட பொது அமைப்புக்களின் ஒன்றிய பிரதி நிதிகள், அரசியல் கட்சி பிரமுகர்கள், மற்றும் பொது அமைப்புகளின் பிரதிநிதிகள் என பலரும் சம்பவ இடத்துக்குச் சென்று இப்பகுதிக்கு அதிகாரிகள் வந்தமை தொடர்பில் கேள்வி எழுப்பியுள்ளனர்.
பொலிஸாரின் ஒத்துழைப்பு
இதன்போது பொலிஸார் மற்றும் பொது மக்களுக்கு இடையில் முரண்பாடு ஏற்பட்டுள்ளது.
தொடர்ந்து பொலிஸாரின் ஒத்துழைப்புடன் அப்பகுதியில் கனியவள மணல் அகழ்வதற்கான இடங்களை பார்வையிட்டுவதற்கு உட்செல்ல முயன்ற நிலையில் மக்கள் திரண்டு இதற்கான எதிர்ப்பை தெரிவித்துள்ளனர்.