தமிழகம்-இலங்கை மீனவர்களிடையே 3ம் கட்ட பேச்சுவார்த்தை அடுத்த மாதம் 5ம் தேதி நடத்த தமிழக அரசு திட்டமிட்டுள்ளது.
இதுதொடர்பாக வெளியுறவுத்துறை அமைச்சகத்திற்கு கடிதம் எழுதியுள்ள தமிழக மீன்வளத்துறை, சென்னையில் நடைபெறும் பேச்சுவார்த்தைக்கான அனுமதியை அளித்து உரிய ஏற்பாடுகளை செய்துதரும்படி கேட்டுக்கொண்டுள்ளது. பாக் ஜலசந்தியில் தமிழர்களுக்கு இருக்கும் பாரம்பரிய மீன்பிடிக்கும் உரிமை, சிறைப்பிடிக்கப்படும் மீனவர்களையும் அவர்களது படகுகளையும் விரைவாக விடுவிப்பது உள்ளிட்ட விவகாரங்கள் அந்த பேச்சுவார்த்தையில் விவாதிக்கப்படும் என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சென்னை மற்றும் கொழும்புவில் நடைபெற்ற இருதரப்பு பேச்சுவார்த்தையில் கலந்துகொண்ட தமிழக மீனவ குழுவினர் 13 பேர் தான் அடுத்தகட்ட பேச்சுவார்த்தையிலும் கலந்துகொள்வார்கள் என்று மீன்வளத்துறை குறிப்பிட்டுள்ளது. அதேபோல், பேச்சுவார்த்தைக்கு அனுமதியளித்த பிறகு இலங்கை தரப்பில் கலந்துகொள்ளும் மீனவப் பிரதிநிதிகளின் பட்டியலையும் அளிக்க வேண்டும் என்று வெளியுறவுத்துறை அமைச்சகத்தை தமிழக மீன்வளத்துறை அமைச்சகம் கேட்டுக்கொண்டுள்ளது.