அரசியல் அடிமைத்தனத்தை ஒழிக்க உதயமானதுதான் மக்கள்நலக் கூட்டணி என விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தொல். திருமாவளவன் தெரிவித்துள்ளார்.
தர்மபுரி மாவட்டம் அரூரில் மக்கள் நலக்கூட்டணியின் பொதுக்கூட்டம் நடைபெற்றது. இதில் அதன் கூட்டணி கட்சி தலைவர்கள் மதிமுக பொதுச் செயலாளர் வைகோ, விடுதலைச் சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன், மார்க்சிஸ்ட் கட்சி மாநிலச் செயலாளர் ஜி.ராமகிருஷ்ணன், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாநிலச் செயலாளர் முத்தரசன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். கூட்டத்தில் பேசிய திருமாவளவன், இன்னும் எத்தனை காலத்திற்கு அரசியல் அடிமைகளாக வாழ வேண்டும் என்றும், அதனை மாற்றுவதற்காகத் தான் மக்கள் நலக்கூட்டணி அமைக்கப்பட்டது என்று அவர் குறிப்பிட்டார்.
இதனைத்தொடர்ந்து பேசிய மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் ஜி.ராமகிருஷ்ணன், தமிழகத்தை ஆட்சி செய்த திமுக, அதிமுக கட்சிகளால் மக்கள் பிரச்னைகளை தீர்க்க முடியவில்லை என்றும், அதற்கு தீர்வு காணவே மக்கள் நலக் கூட்டணி அமைக்கப்பட்டதாகவும் குறிப்பிட்டார்.