தி.மு.க. தலைமைக் கழகமான சென்னை அண்ணா அறிவாலயத்தில் மு.க.ஸ்டாலின் நேற்று திங்கட்கிழமை (28/12/2015) நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தினார்.
இந்த ஆலோசனைக் கூட்டத்தில் 5-ந்தேதி தி.மு.க. சார்பில் நடத்தப்படும் ஆர்ப்பாட்டம் குறித்து விவாதிக்கப்பட்டது. இந்த கூட்டத்திற்கு பிறகு தி.மு.க. பொருளாளர் மு.க.ஸ்டாலின் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:- சென்னையில் பெருமழை வெள்ளத்தால் பாதிப்புக்குள்ளாவதற்கு காரணமான, செம்பரம்பாக்கம் ஏரித்தண்ணீரை முன்னறிவிப்பின்றி திறந்து விட்டது தொடர்பாக நீதி விசாரணை கோரி கருணாநிதி தலைமையில் ஜனவரி 5-ம் தேதி போராட்டம் நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது.
ஆனால் வெள்ளத்தில் கடுமையாக பாதிக்கப்பட்ட சைதாப்பேட்டை, தாம்பரம் பகுதியில் தி.மு.க. சார்பாகப் போராட்டம் நடத்துவதற்கு காவல்துறை அனுமதி மறுத்துவிட்டது. இதனால், காவல்துறை அனுமதி அளித்துள்ள, சென்னை சேப்பாக்கத்தில் கருணாநிதி தலைமையில், திட்டமிட்டபடி போராட்டம் நடத்தப்படும். மழை வெள்ளத்தால் ஒத்திவைக்கப்பட்டுள்ள “நமக்கு நாமே” விடியல் மீட்புப்பயணம் ஜனவரி மாதத்தில் மீண்டும் தொடங்கும். முதல்-அமைச்சர் ஜெயலலிதா, வாரம் ஒருமுறை செய்தியாளர்களை சந்திப்பேன் என்று கூறியபடி இதுவரை பத்திரிகையாளர்களை சந்திக்காதது தொடர்பாக அவரிடம் அனைவரும் கேள்வி எழுப்ப வேண்டும். இவ்வாறு மு.க.ஸ்டாலின் கூறினார்.