ரோம் நகரில் உள்ள வாடிகன் புனித பீட்டர் சதுக்கத்தில் நாளை நடைபெற உள்ள விழாவில் போப் ஆண்டவர் பிரான்சிஸ், அன்னை தெரசாவை புனிதர் பட்டம் பெற்றவராக அறிவித்து சிறப்பு செய்கிறார்.
இதையொட்டி தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
நோபல் பரிசு பெற்றவரும், ஏழைகளுக்கு சேவை செய்வதற்காக தொடங்கப்பட்ட மிஷனரிஸ் ஆப் சாரிட்டி நிறுவனருமான அன்னை தெரசா புனிதராக அறிவிக்கப்பட உள்ளது இந்தியாவுக்கு பெருமை.
தமிழகத்தில் பெண்களுக்கு என பிரத்யேகமாக அன்னை தெரசா பல்கலைக்கழகம் அமைக்கப்பட்டு, தொடர்ந்து தமிழக அரசின் ஆதரவுடன் பெண்களின் கல்வி வழங்கப்படுகிறது. எனது தலைமையிலான தமிழக அரசு, அன்னை தெரசாவை பின்பற்றி அடித்தட்டு மக்களுக்கு பல்வேறு உதவிகளை செய்து வருகிறது.
1994-ம் ஆண்டு ஜனவரி 20-ம் தேதி அன்னை தெரசா என் வீட்டிற்கு வந்து எனக்கு ஆசி வழங்கினார். 1994ம் ஆண்டு மார்ச் 9-ம் தேதி சர்வதேச மகளிர் தின விழாவிலும் கலந்துகொண்டார். இது என் வாழ்வில் மறக்க முடியாத நிகழ்வாகும்.
அன்னை தெரசாவின் வாழ்க்கை மற்றும் அவரது பணிகள் அனைத்தும் பலருக்கு ஊக்கம் அளிப்பதாக உள்ளது. இனி புனிதர் தெரசாவாக மேலும் பலருக்கு அவர் ஊக்கம் அளிப்பார்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.