கடந்த 2015 ஓகஸ்ட் மாதம் பதவியேற்ற சிறிலங்காவின் கூட்டு அரசாங்கத்தின் அமைச்சரவை முதல் முறையாக மாற்றியமைக்கப்படவுள்ளது.
அமைச்சரவை மாற்றம் பற்றிய செய்திகள் பல மாதங்களாகவே வெளிவந்து கொண்டிருந்தாலும், இரண்டு பிரதான கட்சிகளுக்கும் இடையில் இந்த விடயத்தில் இணக்கப்பாட்டை எட்டுவதில் பிரச்சினைகள் காணப்பட்டு வந்தன.
சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேனவுக்கும், பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுக்கும் இடையில் நேற்று நடத்தப்பட்ட பேச்சுக்களை அடுத்து இந்த இழுபறிக்கு .முடிவு காணப்பட்டுள்ளது. இதையடுத்து திங்கட்கிழமை அமைச்சரவை மாற்றியமைக்கப்படவுள்ளது.
வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர அந்தப் பதவியில் இருந்து நீக்கப்பட்டு, நிதி மற்றும் ஊடகத்துறை அமைச்சராக நியமிக்கப்படவுள்ளார்.
நிதியமைச்சராகப் பதவி வகிக்கும் ரவி கருணாநாயக்க வெளிவிவகார அமைச்சராக நியமிக்கப்படவுள்ளார்.
பொது நிர்வாக அமைச்சராக கயந்த கருணாதிலகவும், காணி அமைச்சராக மத்தும பண்டாரவும் நியமிக்கப்படவுள்ளதாகவும் கொழும்பு ஆங்கில நாளிதழ் செய்தி வெளியிட்டுள்ளது.