கடந்த 6 வாரங்களில் மட்டும் கட்சியினர் மீது 46,802 வழக்குகள் பதியப்பட்டுள்ளன என மாவட்ட தேர்தல் அலுவலர் பி.சந்திரமோகன் கூறினார்.
இது குறித்து அவர் செய்தியாளர்களிடம் கூறியது: ஏப்ரல் 22-ஆம் தேதி முதல் வேட்புமனு தாக்கல் தொடங்க உள்ளது. இதற்காக, ஏப்ரல் 29 வரை 7 நாள்களுக்கு (ஏப்.24 தவிர) வேட்பாளர்கள் மனுதாக்கல் செய்ய அந்தந்த தொகுதித் தேர்தல் அலுவலரிடம் வேட்பு மனு அளிக்கலாம். இதற்காக அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளன. அதேபோல், மார்ச் 4 முதல் தேர்தல் நடத்தை விதிகள் அமலில் இருந்து வருகின்றன.
இந்த நிலையில், சென்னை மாவட்டத்தில் சுவர் விளம்பரங்கள், சுவரொட்டிகள், பேனர்கள் ஒட்டுவது தொடர்பாக உயர்நீதிமன்றத்தில் வழக்குகள் உள்ளன. அதேபோல், நீதிமன்ற அறிவுறுத்தலின்படி, விளம்பரத் தடை அமலில் உள்ளது. இதனை அனைத்து கட்சியினரும் பின்பற்ற வேண்டும். விதிமீறல் நடவடிக்கை: சுவர் விளம்பரங்கள் உள்ளிட்ட கட்சி பேனர்கள் வைத்தது தொடர்பாக கடந்த 6 வாரங்களில் மட்டும் 46 ஆயிரத்து 802 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.
அந்த வகையில், அரசு, தனியார் சுவர்களில் விளம்பரம் செய்து விதிமீறியவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. மேலும், பதற்றமான 400 வாக்குச்சாவடிகளுக்கு கூடுதல் பாதுகாப்பு அளிக்கப்பட்டுள்ளது. பறக்கும் படையினர் அதிரடி: தேர்தல் பிரசாரம் உள்ளிட்ட விதிமீறலில் இதுவரை 181 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. இதற்காக, தேர்தல் பறக்கும் படையினர் சிறப்பாகச் செயல்பட்டு வருகின்றனர் என்றார்.