ஜெயலலிதா மரியாதை
பேரறிஞர் அண்ணாவின் 108–வது பிறந்தநாள் நேற்று தமிழகம் எங்கும் கொண்டாடப்பட்டது. இதையொட்டி சென்னை அண்ணாசாலையில் உள்ள அண்ணா சிலை மலர்களால் அலங்காரம் செய்யப்பட்டு இருந்தது. சிலைக்கு கீழே அவரது உருவப்படம் அலங்கரித்து வைக்கப்பட்டு இருந்தது.
அண்ணா சிலைக்கு மரியாதை செலுத்துவதற்காக முதல்–அமைச்சர் ஜெயலலிதா காலை 11.30 மணிக்கு வந்தார். அவரைப்பார்த்ததும் அண்ணாசாலையில் கூடியிருந்த தொண்டர்கள், ‘‘புரட்சித்தலைவி வாழ்க, அண்ணா வாழ்க’’ என்று கோஷம் எழுப்பினர். முதல்–அமைச்சர் ஜெயலலிதாவை அமைச்சர்கள் ஓ.பன்னீர்செல்வம், கடம்பூர் ராஜூ மற்றும் அதிகாரிகள் பூங்கொத்து கொடுத்து வரவேற்றனர்.
சிறப்பு மலர்
அதன் பிறகு முதல்–அமைச்சர் ஜெயலலிதா அண்ணா படத்துக்கு மலர் தூவி மரியாதை செலுத்தினார். இந்த நிகழ்வை தொடர்ந்து அண்ணா பிறந்தநாள் சிறப்பு மலரை முதல்–அமைச்சர் ஜெயலலிதா வெளியிட்டார். இதை அமைச்சர் வி.சரோஜா பெற்றுக்கொண்டார்.
இந்த நிகழ்ச்சியில் மேயர் சைதை துரைசாமி, எம்.எல்.ஏ.க்கள், மாவட்ட செயலாளர்கள், அணி நிர்வாகிகள் என பலரும் கலந்து கொண்டனர்.