சென்னையில் முதல்–அமைச்சர் ஜெயலலிதா வீடு அமைந்திருக்கும் போயஸ் கார்டன் பகுதி 118–வது வார்ட்டில் வருகிறது. பெருநகர சென்னை மாநகராட்சி தேர்தலில் இந்த வார்டில் அ.தி.மு.க. சார்பில் கே.சி.விஜய் வேட்பாளராக நிறுத்தப்பட்டுள்ளார்.
ஆனால், இவரை வேட்பாளராக அறிவித்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து, அந்த வார்டின் தற்போதைய கவுன்சிலர் சிவராஜ் தலைமையில் சுமார் 50 பேர் நேற்று சென்னை ராயப்பேட்டையில் உள்ள அ.தி.மு.க. தலைமை அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். மேலும், கட்சியில் இருந்து வழங்கப்பட்ட உறுப்பினர் அட்டைகளையும் அலுவலகத்தில் திருப்பி அளிக்க போராட்டக்காரர்கள் முயன்றனர். ஆனால், அதற்கு முன்னதாகவே அலுவலக வாயில் கதவு மூடப்பட்டது. இதனால், வாயில் முன்பு நின்றே அவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
மாவட்ட செயலாளர் வி.பி.கலைராஜனுக்கு எதிராகவும் கோஷமிட்டனர். போராட்டம் காரணமாக அந்த சாலையில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட தொடங்கியது. உடனடியாக, அங்கு வந்த போலீசார் அவர்களை சாலையோரமாக அழைத்து சென்றனர். அதன் பிறகு போக்குவரத்து சீரானது. சற்று நேரத்தில் போராட்டக்காரர்களும் கலைந்து சென்றனர். இதனால், அ.தி.மு.க. தலைமை அலுவலகம் முன்பு நேற்று சுமார் ½ மணி நேரம் பரபரப்பு நிலவியது.