‘நுவரெலியா- கண்டி பிரதான வீதி, நுவரெலியா நகரின் நுழைவாயிலில் உள்ள மிகவும் பழமைவாய்ந்த இந்து ஆலயத்தை (நுவரெலியாவில் உள்ள சகல இந்து கோவில்களுக்கும் கரகம் பாலிக்கும் கோவில்) நுவரெலியா மாநகர சபை ஆணையாளர் அகற்றுவதற்கு எடுத்துள்ள நடவடிக்கையை, உடனடியாக நிறுத்த வேண்டும்’ என பெருந்தோட்ட கைத்தொழில் அமைச்சர் நவீன் திசாநாயக்க பணிப்புரை விடுத்தார். நுவரெலியா மாவட்ட அபிவிருத்தி இணைப்புக் குழு கூட்டம், இணைத் தலைவர்களான அமைச்சர் நவீன் திசாநாயக்க, நாடாளுமன்ற உறுப்பினர்களான ஆறுமுகன் தொண்டமான், கே.கே.பியதாச ஆகியோர் தலைமையில், நுவரெலியா மாவட்ட செயலகத்தில் இன்று (27) நடைபெற்றது. இக்கூட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே, அவர் இவ்வாறு கூறினார்.
இங்கு மேலும் கூறிய அவர், ‘நுவரெலியா நகரில் அனைத்து இன மக்களும் ஒற்றுமையுடன் வாழ்கின்றார்கள். எனவே, இங்கிருக்கின்ற ஆலயத்தை அகற்றுவது தமிழர்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தும். எனவே, ஆலயத்தை மட்டுமல்ல விகாரைகளையோ அல்லது வேறு எந்த வணக்கஸ்தலங்களையோ அகற்றுவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டாம்’ என்றார்.