அண்மையில் இலங்கையில் இடம்பெற்ற தற்கொலை குண்டு வெடிப்பின் பின்னணியில் அமெரிக்கா இருப்பதாக இந்திய ஊடகம் ஒன்று வெளியிட்டுள்ளது.
கடந்த 21ம் திகதி இலங்கையின் கொழும்பு உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் தாக்குதலில் 250க்கும் மேற்பட்டவர்கள் கொல்லப்பட்டதோடு , 500 பேர் வரையில் காயமடைந்திருந்தனர்.
இந்த தாக்குதலுக்கு ஐ.எஸ் தீவிரவாத அமைப்பு உரிமை கோரியிருந்தததை அடுத்து நாட்டில் பலர் கைது செய்யப்பட்டு விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர்.
இந்நிலையில், இந்த தாக்குதலின் பின்னணியில் அமெரிக்கா இருப்பதாக இந்திய ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.
அந்த செய்தியில்
“தொடர்குண்டு வெடிப்பின் பின்னணியில் வெளிநாடுகளின் சதி இருப்பதாக பிரதமர் ரணில் விக்ரமசிங்க குற்றம்சாட்டி வருகின்றார். ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவும், “இந்த பயங்கரத்தில் சர்வதேச சதி இருப்பதை உணர முடிகிறது” என அண்மையில் கூறியிருந்தார்.
ஜனாதிபதிக்கும், பிரதமருக்கும் இடையில் முரண்பாடுகள் தலை தூக்கியுள்ள நிலையில் இருவரும் ஒரே வித சந்தேகத்தை முன்வைத்திருப்பது பக்கங்களை அம்பலப்படுத்துகின்றன.
இப்படிப்பட்ட சூழலில்தான், அமெரிக்காவுக்கும் பாதுகாப்பு அமைச்சின் முன்னாள் செயலாளர் கோத்தபாய ராஜபக்சவுக்கும் இடையே இருக்கும் இரகசிய உடன்படிக்கை குறித்து தகவல்கள் வெளியாகியுள்ளன.
அமெரிக்கா, சீனா, இந்தியா, நோர்வே, பிரித்தானியா, ஜப்பான், பாகிஸ்தான் உள்ளிட்ட 7 நாடுகளின் உதவியுடன் கடந்த 2009ம் ஆண்டு இடம்பெற்ற இறுதி யுத்தத்தில் விடுதலைப் புலிகளை, மகிந்த ராஜபக்சவும் அவரது சகோதரர்களும் இல்லாது செய்தனர்.
யுத்தம் முடிவுக்கு வந்ததையடுத்து சீனா மற்றும் பாகிஸ்தானின் செல்லப்பிள்ளையாக முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச மாறிப்போனார்.
இதனை பொறுத்துக்கொள்ள முடியாத இந்தியா, பிரித்தானி, நோர்வே நாடுகளின் உதவியுடன் 2015ம் ஆண்டு இடம்பெற்ற ஜனாதிபதி தேர்தலில் மகிந்த ராஜபக்சவை வீழ்த்த, மைத்திரிபால சிறிசேனவை ஜனாதிபதி வேட்பாளராக முன்னிறுத்தியது அமெரிக்கா.
எனினும், மைத்திரிபால சிறிசேனவும் ஒரு கட்டத்தில் சீனா, பாகிஸ்தானின் ஆதரவாளராக மாறிப்போனார். இந்த பின்னணியில் தான் கடந்த 3 ஆண்டுகளாக, அமெரிக்காவிடம் மிக நெருக்கமான, அரசியல் ரீதியாக நட்பை கோத்தபாய ராஜபக்ச பலப்படுத்தி வருவதாகவும் அதில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
இந்நிலையில், எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் மைத்திரியை வீழ்த்தி கோத்தபாயவை ஜனாதிபதியாக்க கடந்த 6 மாதகாலமாக இரகசிய வியூகங்களை அமெரிக்கா மேற்கொண்டுள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது .
இதன் ஒரு கட்டமாக, கோத்தபாயவின் அமெரிக்க குடியுரிமையை இரகசியமாகத் திரும்ப பெற்றுக்கொண்டிருக்கிறது அமெரிக்க அரசாங்கம். அமெரிக்காவும் ராஜபக்ச, சகோதரர்களும் இதனை வெளிப்படையாக அறிவிக்கவில்லை.
“இலங்கையின் அரசியலமைப்பு சட்டப்படி இரட்டை குடியுரிமை பெற்றவர்கள் ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட முடியாது.
இந்நிலையில் கடந்த மார்ச் மாதம் அமெரிக்கா சென்றிருந்த கோத்தபாய ராஜபக்ச, அங்கு தங்கியிருந்த 3 வாரங்களும் அமெரிக்க உயர் ஸ்தானிகர்களுடன் பல கட்ட ஆலோசனைகளை நடத்தியிருக்கிறார்.
அமெரிக்காவே தன்னுடைய குடியுரிமையை மீளப்பெற்றுக்கொண்டது போல இருக்க வேண்டும் என்பது கோத்தபாயவின் கோரிக்கையாக இருந்துள்ளதாக இலங்கை புலனாய்வு அமைப்புகளோடு தொடர்புடைய தமிழீழ ஆதரவாளர்கள் சிலர் தெரிவித்துள்ளனர்.
இதனை அமெரிக்காவும் ஏற்றுக்கொண்டிருக்கிறது. ஜனாதிபதி தேர்தலில் கோத்தபாய ராஜபக்ச போட்டியிடுகின்றார் என்ற தகவல் வெளியாக கூடாது என்பதற்காகவே குடியுரிமை இரத்து இரகசியமாக வைக்கப்படுகிறது.
கோத்தபாயவின் வெற்றிக்காகத்தான் இலங்கையில் வெடிகுண்டு பயங்கரங்கள் தொடர்ந்து நடந்தேறுகின்றதாகவும் அந்த செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது. ஜனாதிபதி தேர்தல் வரை இலங்கையை பதற்றத்திலேயே வைத்திருக்க அமெரிக்கா திட்டமிடுகிறதாக அந்த செய்தியில் மேலும் குறிப்பிட்டப்பட்டுள்ளதாக தெரியவருகின்றது.