இந்தியாவில் தங்கியுள்ள இலங்கை தமிழ் ஏதிலிகள் அனைவரையும் நாட்டிற்கு மீண்டும் அழைத்துக்கொள்ள விரும்புவதாக இந்தியாவிற்கான இலங்கை தூதுவர் ஒஸ்டின் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.
புதுடெல்லியில் நேற்று (18) நடைபெற்ற நிகழ்வொன்றில் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டபோதே அவர் இதனை வெளிப்படுத்தியுள்ளார்.
தமிழகத்தில் தங்கியிருந்த சுமார் 5,000 ஏதிலிகள் ஏற்கனவே தாயகம் திரும்பியுள்ள நிலையில், எஞ்சியுள்ளவர்களையும் அழைத்துக்கொள்ள விரும்புவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
நாட்டில் ஏற்பட்ட அசாதாரண சூழ்நிலையால், சுமார் 1 இலட்சம் அகதிகள் இந்தியாவில் தஞ்சம் கோரியுள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
அவர்களில் 70 வீதமானோர் நாட்டிற்கு மீண்டும் செல்ல விருப்பம் தெரிவித்துள்ள நிலையில், அது குறித்து அவர்களிடம் கலந்துரையாடுவதற்கு விரைவில் அவர்கள் தங்கியுள்ள முகாம்களுக்கு நேரடியாகச் செல்லவுள்ளதாகவும் ஒஸ்டின் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.
மேலும் நாடு திரும்பும் , அவர்களுக்கான தங்குமிட வசதிகள், பாதுகாப்பு உள்ளிட்ட காரணிகள் தொடர்பிலும் அதிகக் கவனம் செலுத்தியுள்ளதாகவும் அவர் இதன்போது தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது..