ஊடகவியலாளர் கடத்தல் குற்றவாளி மருத்துவமனையில் அனுமதி!

ஊடகவியலாளர் பிரகீத் எக்நெலிகொட காணாமல் போன சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேகத்தின் பேரில் கடந்த ஒன்பது மாத காலமாக விளக்க மறியலில் தடுத்து வைக்கப்பட்டுள்ள, ஸ்ரீலங்கா இராணுவ புலனாய்வுப் பிரிவின்லெப்டினன்ட கேணல் சம்மி குணரட்ன வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இராணுவ புலனாய்வுப் பிரிவின் கட்டளை அதிகாரியாக கடமையாற்றி வந்த சம்மி குணரட்ன, நேற்று முன்தினம் இரவு திடீரென சுகவீனமுற்றதாகவும், அவரை கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதித்ததாகவும் சிறைச்சாலைத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

நீரிழிவு நோயினால் சம்மி குணரட்ன பாதிக்கப்பட்டிருந்தார் என தெரிவிக்கப்படுகிறது. இதற்காக சிறைச்சாலையின் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த போதிலும், உடல் நிலையில் எவ்வித முன்னேற்றமும் ஏற்படவில்லை.

உடலின் குளுகோசின் அளவு திடீரென மிகவும் குறைந்த காரணத்தினால், லெப்டினன்ட் கேணல் சம்மி குணரட்ன மயக்கமடைந்துள்ளார்.

இதனைத் தொடர்ந்து சிறைச்சாலை மருத்துவர்களின் பரிந்துரைக்கு அமைய கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார் என தெரிவிக்கப்படுகிறது.

இதேவேளை, எக்னெலிகொட காணாமல் போதல் தொடர்பில் 9 இராணுவப் புலனாய்வுப் பிரிவு உத்தியோகத்தர்கள் தொடர்ச்சியாக கைது செய்யப்பட்டுள்ளதனால் அவர்கள் பெரும் உள மற்றும் உடல் ரீதியான சிரமங்களை எதிர்நோக்கி வருவதாக சிறைச்சாலை வட்டாரத் தகவல்களை மேற்கோள்காட்டி கொழும்பு ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது.

இராணுவம்ஊடகவியலாளர்ஊடகவியலாளர் பிரகீத் எக்நெலிகொடகடத்தல்புலனாய்வுத்துறைபோலீஸ்மருத்துவமனைஸ்ரீலங்கா
Comments (0)
Add Comment