அ.தி.மு.க. (அம்மா) கட்சி வேட்பாளர் டி.டி.வி. தினகரன் இன்று அ.தி.மு.க. தலைமை அலுவலகத்தில் நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தினார். பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-
ஆர்.கே.நகரில் இடைத்தேர்தல் நிறுத்தப்பட்டது திட்டமிட்ட நாடகம். ஆர்.கே.நகரில் நாங்கள் எந்த பணப்பட்டுவாடாவும் செய்யவில்லை.
வேறு இடத்தில் பணம் பறிமுதல் செய்யப்பட்டதற்கும் ஆர்.கே. நகர் தேர்தலுக்கும் என்ன தொடர்பு இருக்கிறது என தெரியவில்லை. அமைச்சர் வீட்டில் நடந்த வருமான வரி சோதனைக்கும் தேர்தல் ரத்து செய்யப்பட்டதற்கும் சம்பந்தம் இல்லை.
இந்த தேர்தலில் எதிர்க்கட்சிகளின் பிரச்சாரத்தை மக்கள் ஏற்கவில்லை. நாங்கள் வெற்றி பெற்றுவிடுவோம் என்பதால் எதிர்க்கட்சிகள் விஷம சதி செய்துவிட்டன. அவர்களின் பொய் குற்றச்சாட்டு காரணமாகவே தேர்தல் ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.
அரசியலில் எதுவும் பின்னடைவு கிடையாது, எல்லாம் அனுபவம். தி.மு.க., பா.ஜ.க., ஓ.பி.எஸ். அணி மற்றும் தேர்தல் ஆணையம் கூட்டு முயற்சியுடன் செயல்படுகின்றன.
தேர்தலின்போது தேவையில்லாமல் வருமான வரித்துறை சோதனை நடத்தியதற்கு தேர்தல் ஆணையமும் மத்திய அரசும் தான் காரணம். தேர்தலை நடத்த அவர்கள் விரும்பவில்லை.
இவ்வாறு அவர் கூறினார்.