கடலோர காவல் படை தினம் பிப்ரவரி 1–ந் தேதி கொண்டாடப்பட உள்ளது. இதையொட்டி 39–வது ஆண்டு கடலோர காவல் படை வார விழா கொண்டாடப்பட்டு வருகிறது. இதன் ஒரு அங்கமாக நேற்று சென்னை நேப்பியர் பாலம் அருகே உள்ள கிழக்கு மண்டல கடலோர காவல் படை தலைமை அலுவலகத்தில் ‘உங்களுக்காக’ என்ற அரசு சாரா அமைப்புடன் இணைந்து ரத்ததான முகாம் நடத்தப்பட்டது.
முகாமை ஆற்காட்டு இளவரசர் நவாப் முகமது அப்துல் அலி தொடங்கிவைத்தார். இதில் கடலோர காவல் படையினர், அவர்கள் குடும்பத்தினர் என 200–க்கும் மேற்பட்டோர் ஆர்வத்துடன் ரத்ததானம் செய்தனர். முகாமில் சேகரிக்கப்பட்ட ரத்தம் ஸ்டான்லி மருத்துவ கல்லூரி மற்றும் மருத்துவமனையில் உள்ள ரத்த வங்கிக்கு அனுப்பப்பட்டது. நிகழ்ச்சியில் கிழக்கு மண்டல கடலோர காவல் படையின் மூத்த அதிகாரி எம்.ஏ.தல்ஹா, ஸ்டான்லி மருத்துவ கல்லூரி முதல்வர் டாக்டர் ஐசக் கிறிஸ்டியன் மோசஸ், கடலோர காவல் படையினரின் மனைவிமார்கள் சங்கத்தை சேர்ந்தவர்கள் உள்ளிட்ட ஏராளமானோர் பங்கேற்றனர்.