கள்ளியங்காடு சம்பவத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து மட்டக்களப்பில் ஹர்த்தால்- தமிழ் உணர்வாளர் அமைப்பு

மட்டக்களப்பு – கள்ளியங்காடு இந்து மயானத்தில் தற்கொலை குண்டுதாரியின் உடல் எச்சங்களை புதைக்கப்பட்டமைக்கு ‘தமிழ் உணர்வாளர் அமைப்பு ‘ கண்டனம் தெரிவித்துள்ளது. அத்தோடு அவற்றை விரைவில் அப்புறப்படுத்துவதற்கு நடவடிக்கை எடுக்கப்படாவிட்டால் மட்டக்களப்பு மாவட்டத்தில் தொடர்ந்தும் ஹர்த்தால் முன்னெடுக்கப்படும் என்றும் அந்த அமைப்பு எச்சரித்துள்ளது.

புதைக்கப்பட்ட எச்சங்கள் விரைவில் அப்புறப்படுத்தப்பட வேண்டும் என்பதை வலியுறுத்தி செப்டெம்பர் 2 ஆம் திகதி திங்கட்கிழமை ஹர்த்தால் முன்னெடுக்கப்படவுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழ் உணர்வாளர் அமைப்பினால் இது தொடர்பில் வெளியிடப்பட்டுள்ள ஊடக அறிக்கையில் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளது.

அந்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, பாரம்பரிய கலாசார மத முறைமைக்கு மாறான ஒரு இனத்தினரிதும் மதத்தினரதும் மனங்களை காயப்படுத்தும் முகமாக மட்டக்களப்பு கள்ளியங்காடு இந்து மயானத்தில் முஸ்லிம் பயங்கரவாதியின் உடற்பாகங்களை புதைத்த நிகழ்வானது ஏற்க முடியாத ஒன்று.

மட்டக்களப்பு மாவட்டத்தை நிர்வகிக்கும் அரச அதிபரும் மட்டக்களப்பு நகரை ஆட்சி செய்யும் நகர பிதாவுமே இதற்கு பொறுப்புகூற வேண்டியவர்களாவர். பயங்கரவாதியின் உடல் எச்சம் புதைக்கப்பட்டதால் தமிழ் மக்கள் மத்தியில் ஆத்திரம் அருவருப்பு குரோத மனப்பான்மை என்பன அதிகரித்து வருகின்றன. இதற்கு தீர்வு தடியடியோ அல்லது கண்ணீர்புகையோ கிடையாது.

மக்கள் தங்கள் எதிர்ப்புக்களை ஆக்கிரோசமாக வெளிக்காட்டிய போது இதனை கணக்கில் எடுக்காது ஒருவருக்கு ஒருவர் குற்றம் சாட்டிக் கொண்டு காலத்தை கடத்தாது புதைக்கப்பட்ட மனித எச்சங்களை உடன் அப்புறப்படுத்தாவிட்டால் உங்கள் செயற்பாடுகளுக’கு எதிராக தொடர் போராட்டங்கள் மாவட்டம் முழுவதும் முன்னெடுக்கப்படும். இதன் முதற்கட்டமாக செப்டெம்பர் 2 ஆம் திகதி அமைதியான முறையில் ஹர்த்தாலை முன்னெடுப்போம் என்பதைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.


எதிர்ப்பு
Comments (0)
Add Comment