திருகோணமலை, கிளிவெட்டி, குமாரபுரம் தமிழ் மக்கள் மீதான இனப்படுகொலை தாக்குதல் நடாத்தப்பட்டு இன்றுடன் 23 வருடங்கள் பூர்த்தியாகின்றன.
கடந்த 1996ஆம் ஆண்டு பெப்ரவரி 11ஆம் திகதி குமாரபுரம் கிராமத்தில் இலங்கை இராணுவம் மற்றும் துணைப்படைகள் மேற்கொண்ட படுகொலை சம்பவத்தில் பெண்கள் குழந்தைகள் உட்பட 26 பேர் சுட்டுக் கொல்லப்பட்டதுடன், 36 பேர்வரை படுகாயமடைந்தனர்.
இப்படுகொலைகள் தொடர்பாக ராணுவ வீரர்கள் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டு, 2004ஆம் ஆண்டு விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டன.
கடந்த 20 வருடங்களுக்கு மேலாக நடைபெற்ற வழக்கில், 8 இராணுவ வீரர்கள் சநதேகநபர்களாக இனங்காணப்பட்ட நிலையில், ஒருவர் பின்னர் நிரபராதியென விடுவிக்கப்பட்டார்.
மற்றொருவர் இறந்துவிட்ட நிலையில் எஞ்சிய 6 இராணுவ வீரர்களுக்கு எதிராக தொடர்ந்து விசாரணை நடைபெற்றது.
எனினும் அவர்களும் குற்றமற்றவர்கள் என தெரிவிக்கப்பட்டு கடந்த 2016ஆம் ஆண்டு யூலை மாதம் அநுராதபுரம் நீதிமன்றத்தால் விடுவிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.