மார்த்தாண்டம் பகுதி காவல்துறையினர், இதை தற்கொலை வழக்காக பதிவு செய்தனர். இதனை எதிர்த்து சசிபெருமாளின் மகன் விவேக், சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார். இந்த வழக்கில் தன்னையும் ஒருவராக சேர்க்க மதிமுக பொதுச் செயலாளர் வைகோ கேட்டுக்கொண்டுள்ளார். இவ்வழக்கின் விசாரணை வரும் 31-ம் தேதி நடக்க இருக்கிறது. அப்போது நீதிமன்றத்தில் ஆஜராகி வாதாட வைகோ முடிவு செய்துள்ளார். எனவே சசிபெருமாளின் இறப்பு குறித்த ஆதாரங்களை திரட்ட நேற்று உண்ணா மலைக்கடைக்கு வைகோ வந்திருந்தார்.
போராட்டம் நடத்துவதற்கு முன் சசிபெருமாள் குளித்து விட்டு வந்த சசிதரன் என்பவரின் வீடு, உண்ணாமலைக்கடை பேரூராட்சி தலைவர் ஜெயசீலன் மற்றும் அப்பகுதி மக்களிடம் விவரங்கள் கேட்டறிந்தார்.
பின்னர் வைகோ கூறும்போது, ‘செல்போன் கோபுர உச்சிக்கு சென்ற சசிபெருமாளை அரசு அதிகாரிகள் கிண்டல் செய்துள்ளனர். ஏஎஸ்பி விக்ராந்த் பாட்டீல், போராட்டம் நடத்திய பேரூராட்சி தலைவர் ஜெயசீலனை பார்த்து குடித்திருக்கிறீர்களா? என அவதூறாக பேசியுள்ளார். சசிபெருமாளின் மகன் தொடர்ந்துள்ள வழக்கில் என்னையும் சேர்க்க சொல்லியிருக்கிறேன். அதில் வாதாடவே, இப்போது தகவல்களை திரட்டியுள்ளேன். சசிபெருமாள் மரணத்துக்கு தமிழக முதல்வர் அனுதாபம்கூட தெரிவிக்கவில்லை.
மேலும் அவர், என் அப்பா இறந்தபோதுகூட நான் அவரின் உடலை தொட்டுத் தூக்கவில்லை. சசிபெருமாள் உடலுக்கு உடை மாற்றி விட்டேன். தமிழகத்தில் குடித்து கல்லீரல் கெட்டு சிகிச்சை பெறுபவர்கள் எண்ணிக்கை அதிகம். சசிபெருமாள் இறப்புக்கு அரசுதான் காரணம் என்று வைகோ தெரிவித்துள்ளார்.