தமிழக தலைமை தேர்தல் அதிகாரி ராஜேஷ் லக்கானி சென்னையில் நிருபர்களிடம் கூறியதாவது:- தமிழக சட்டசபை தேர்தல் பாதுகாப்புக்காக 300 கம்பெனி துணை ராணுவத்தினர் வருகிறார்கள். 16 ரெயில்களில் இவர்கள் நாளை சென்னை வருவார்கள்.
தலைமை தேர்தல் கமிஷனர் நசீம் ஜைதி 7-ந் தேதிக்கு பிறகு தமிழகம் வர உள்ளார். சட்டசபை தேர்தலுக்காக மொத்தம் 66,001 வாக்குச்சாவடிகள் அமைக்கப்படுகின்றன. வாக்குப்பதிவுக்காக ஒரு லட்சத்து 52 ஆயிரம் மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் தற்போது கைவசம் உள்ளன. மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்களில் அங்கீகரிக்கப்பட்ட கட்சிகளின் வேட்பாளர் பெயர்கள் புகைப்படத்துடன் அகர வரிசைப்படி இடம் பெறும். அதைத் தொடர்ந்து பதிவு செய்த கட்சிகளின் வேட்பாளர் பெயர்கள் அகர வரிசைப்படி இடம் பெறும்.
இதன் கீழ் சுயேச்சை வேட்பாளர் பெயர் வரும். ‘பூத் சிலிப்’ அச்சடிக்கும் பணி நடந்து வருகிறது. 5–ந் தேதி முதல் வீடு வீடாக ‘பூத்’ சிலிப் வழங்கும் பணி தொடங்கும். தமிழகத்தில் 124 தேர்தல் பார்வையாளர்கள் உள்ளனர். இப்போது கூடுதலாக 42 தேர்தல் செலவின பார்வையாளர்கள் வர உள்ளனர். இவர்கள் முக்கிய பிரமுகர்கள் போட்டியிடும் தொகுதிகளை கண்காணிப்பார்கள். துணை தேர்தல் ஆணையர் ரமேஷ்சிங் நாளை சென்னை வருகிறார். சென்னை, காஞ்சி, திருவள்ளூர், வேலூர், திருவண்ணாமலை மாவட்ட கலெக்டர்கள், எஸ்.பி. மற்றும் உயர் அதிகாரிகளுடன் அவர் ஆலோசனை நடத்துகிறார்.
தற்போது 1 தொகுதிக்கு 3 பறக்கும் படை உள்ளது. இது 5 ஆக உயர்த்தப்படுகிறது. பறக்கும் படைக்கு ஒரே வடிவிலான வாகனங்கள் ஒதுக்கப்பட்டுள்ளது. 3–ந் தேதி மாலையில் இருந்து ஒவ்வொரு வாக்காளர்களுக்கும் அவர்கள் வாக்களிக்கும் ‘பூத்’ விவரம் எஸ்.எம்.எஸ். மூலம் வரும்.