நேற்று புதன்கிழமை அரசியலமைப்பு பேரவையாக பாராளுமன்றை மாற்றியமைக்கும் குறித்த பிரேரணை மீதான விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
அவர் மேலும் உரையாற்றுகையில்,
இலங்கைத் தீவின் வரலாற்றில் திருப்பு முனையான ஒரு காலகட்டத்திலேயே நாங்கள் அனைவரும் அடியெடுத்து வைத்துள்ளோம். இனவாதம், மதவாதம் போன்றவற்றைக் கடந்து, அரசியல் இலாபங்களை துறந்து எங்கள் அனைவருக்கும் உரித்தான இலங்கைத் தீவின் எதிர்காலத்தை ஒளிமயமானதாக மாற்றுவதற்காக நாம் ஒன்றிணைவோம்.
1926 ஆம் ஆண்டு முன்னாள் பிரதமரும் சுதந்திரக் கட்சியின் ஸ்தாபகருமான எஸ்.டபிள்யூ.ஆர்.டி.பண்டாரநாயக்க சமஷ்டி தீர்வுத் திட்டத்தை முன்வைத்தார். எனினும் அவரது கருத்துக்கள் புறக்கணிக்கப்பட்டுள்ளன. இதனையடுத்தே 1976 இல் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த வட்டுக்கோட்டைத் தீர்மானத்தை நிறைவேற்ற வேண்டிய தேவை எழுந்தது.
அன்று தனிநாட்டுக் கொள்கையில் உறுதியாக இருந்த சம்பந்தன் இன்று சுயாட்சிக் கோரிக்கையையும் கைவிட்டு ஐக்கிய இலங்கைக்குள் தீர்வொன்றை காண்பதற்காக நல்லெண்ண சமிக்ஞைகளை வெளிகாட்டி வருகின்றார். எதிரும் புதிருமாக இருந்த ஐ.தே.க.வும் ஸ்ரீல.சு.கட்சியும் ஒருங்கிணைந்த அரசாங்கத்தை உருவாகியுள்ளன.
இத்தகைய வாய்ப்பு இனிவருமா? என்பது கேள்விக்குறியேயாகும். ஆகவே இந்தச் சந்தர்ப்பத்தை சரியாக பயன்படுத்துவோம். உரிமை மறுக்கப்பட்டவர்களுக்கு உரிமையும் நீதி மறுக்கப்பட்டவர்களுக்கு நீதியையும் வழங்குவதற்காக நாம் அனைவரும் ஒன்றிணைய வேண்டும். அதுவே நிலைபேறான சமாதானத்தை இந்த தீவில் உருவாக்குவதோடு நல்லிணக்கம் ஏற்படவழியமைக்கும்.
தமிழர்களின் மரபு வழித் தாயகமான இணைந்த வடகிழக்கு, தேசியம், சுயநிர்ணம், உரிமை மற்றும் இறையாண்மையை உள்ளடக்கிய சமஷ்டி முறையிலான தீர்வுமுறையை புதிய அரசியலமைப்பு உள்வாங்குவது அவசியம். அதற்கேற்றவகையில் அரசியலமைப்பு பேரவை செயற்படும் என்ற நம்பிக்கை உள்ளது.
அன்று சிங்களத் தலைவர்கள் முன்வைத்த தீர்வு முறைகளையும் கோட்பாடுகளையுமே இன்று நாம் கோரி நிற்கின்றோம். தமிழர்கள் சமஷ்டி தீர்வை மற்றும் இணைந்த வடகிழக்கு கோரிக்கையை முன்வைப்பதற்கு முன்னரே எஸ்.டபிள்யூ.ஆர்.டி. பண்டாரநாயக்கவும் கண்டிய சிங்கள பிரதிநிதிகளும் அதனை முன்வைத்துள்ளார்கள்.
சமஷ்டி அடிப்படையிலான இணைந்த வடகிழக்கில் தமிழர்கள் இறையாண்மை யுடன் கூடிய ஒரு தேசமாக அங்கீகரிக் கப்பட்டு அவர்களுக்கான சுயநிர்ணய உரிமை உறுதிப்படுத்தப்பட வேண்டும். அதற்கு புதிய அரசியலமைப்பு வழிகோல வேண்டும் என்றார்.