சிலாபம் நகரில் ஏற்பட்ட இன முரண்பாட்டுக்கு காரணமாக பேஸ்புக்கில் கருத்துக்களை வெளியிட்ட குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட சந்தேகநபருக்கு விளக்கமறியல் நீடிக்கப்பட்டுள்ளது. அதன்படி அவரை எதிர்வரும் 21ஆம் திகதி வரை மீள விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.
சிலாபம் – தேக்கவத்தை பகுதியைச் சேர்ந்த 35 வயதுடைய சந்தேகநபரை, சிலாபம் நீதவான் நீதிமன்றில் நேற்று (வெள்ளிக்கிழமை) முன்னிலைப்படுத்தியபோதே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
சிலாபம் நகரில் ஏற்பட்ட அமைதியற்ற நிலையானது குறித்த சந்தேகத்துக்குரியவரினால் முகபுத்தகத்தில் பதிவேற்றப்பட்டிருந்த பதிவு ஒன்றை அடிப்படையாகக்கொண்டு ஏற்பட்டதாக தெரிவித்தே அவர் கைதுசெய்யப்பட்டார்.
பயங்கரவாதத் தடைச் சட்டம் மற்றும் அவசரகாலச் சட்டம் என்பனவற்றின் கீழ் குறித்த சந்தேகத்துக்குரியவருக்கு எதிராக குற்றம் சுமத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.