தமிழகத்தில் இன்று முதல் படிப்படியாக மழை அதிகரிக்கும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தென்மேற்கு வங்கக் கடலில் இலங்கை கடற்கரைக்கு அருகில் நிலை கொண்டிருந்த குறைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி நாளைக்குள் காற்றழுத்தத் தாழ்வு மண்டலமாக வலுவடையும் என்று வானிலை மையம் தெரிவித்துள்ளது.
இதனால், சென்னை உள்பட தமிழகம் முழுவதும் இன்று முதல் மழை பெய்யும். இந்த மழை அடுத்து வரும் நாள்களில் படிப்படியாக அதிகரிக்கும். இலங்கைக்கு அருகில் தாழ்வு மண்டலம் உருவாவதால் தமிழகம், புதுவை மீனவர்கள் கடலுக்குள் செல்லும் போது எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என்றும் வானிலை மையம் கேட்டுக் கொண்டுள்ளது.
தமிழகம், புதுவையின் சில இடங்களில் இன்று மழையோ, இடியுடன் கூடிய மழையோ பெய்யும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.