பருவநிலை மாறுபாடுகள் குறித்து உலகம் முழுவதும் பேசப்பட்டு வரும் நிலையில், தலைநகர் டில்லியில் ஏற்பட்டுள்ள காற்று மாசுபாடு குறித்து உச்சநீதிமன்றம் வழங்கியுள்ள தீர்ப்பு நாடு முழுவதும் காற்று மாசு பற்றிய பல்வேறு விவாதங்களை எழுப்பியுள்ளது. இத்தருணத்தில் சென்னை மாநகரில் ஏற்படும் காற்று மாசுபாடுகள் பற்றியும், அந்த மாசுபாட்டினை குறைப்பதற்கான வழிகள் குறித்தும் தெரிவிக்கிறது இந்த செய்தித்தொகுப்பு.
சென்னை மாநகரம்
இந்தியாவில் அதிக மக்கள் நெருக்கமும், வாகன அடர்த்தியும் உள்ள நகரங்களில் ஒன்றாக சென்னை மாநகரம் இருக்கிறது. ஒரு நாளைக்கு சுமாராக 600 முதல் 800 வாகனங்கள் வரை சென்னையில் புதிதாக பதிவு செய்யப்படுவதாகக் கூறப்படுகிறது.
தனி நபர்களால் எரிக்கப்படும் குப்பைகள்
லட்சக்கணக்கான வாகனங்கள் நாள்தோறும் இயக்கப்படுவதன் மூலமாக வெளியேறும் புகையை விட, தனி நபர்களால் எரிக்கப்படும் குப்பைகளாலே அதிக அளவில் காற்று மாசுபடுவதாக தெரிவிக்கின்றனர் தமிழக மாசுக் கட்டுப்பாட்டு வாரியத்தினர்.
மாசுக்கட்டுப்பாட்டுவாரியம்
மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் சென்னையில் அதிக மக்கள் கூடும் பகுதிகள், போக்குவரத்து அதிகம் உள்ள இடங்களான தியாகராய நகர், அடையாறு, நுங்கம்பாக்கம் உள்ளிட்ட ஐந்து பகுதிகளில் காற்றில் ஏற்படும் மாசின் அளவை நாள்தோறும் கணக்கிடுகிறது. இதன் மூலம் காற்றில் உள்ள நைட்ரஜன் டை ஆக்சைடு, கார்பன் மோனாக்சைடு மற்றும் காற்றில் உள்ள தூசிகள் குறித்து அளவிடுகிறது.
தூசிகளால் ஏற்படும் மாசு
இதில் குறிப்பாக நச்சு வாயுக்களால் ஏற்படும் மாசின் அளவை விட தூசிகளால் ஏற்படும் மாசின் அளவே அதிகமாக இருப்பதாக மாசுக்கட்டுப்பாட்டு வாரியத்தின் அளவீடுகள் தெரிவிக்கின்றன. காற்றில் ஏற்படும் மாசுகள் வயதானவர்களையும், குழந்தைகளையும் பெரிதும் பாதிப்பதாக தெரிவிக்கின்றனர் மருத்துவர்கள்.
மீள் உருவாக்கம் அவசியம்
காற்று மாசினைக் குறைப்பதற்கு தனிநபர் வாகன பயன்பாட்டை குறைத்து பொதுப் போக்குவரத்தை அதிகமாக பயன்படுத்துவதும், மக்காத குப்பைகளை முறையாக மீள் உருவாக்கம் செய்வதும் அவசியமானதாக இருக்கிறது.