இதனடிப்படையில் சிபிஐ மற்றும் அமலாக்கப் பிரிவு அதிகாரிகள் சேகர் ரெட்டி மீது ஊழல் தடுப்பு சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்தனர். இந்த விசாரணையின் முடிவில் சேகர் ரெட்டியும் அவரது நண்பர் சீனிவாசலுவும் கைது செய்யப்பட்டனர். சட்டவிரோத பணப் பரிமாற்ற வழக்கில் இருவரும் கைது செய்யப்பட்டு புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். இதன்பின்னர் சேகர் ரெட்டியின் கூட்டாளிகளான பிரேம், ரத்தினம், புதுக்கோட்டை ராமச்சந்திரன் ஆகியோரும் கைது செய்யப்பட்டனர்.
இந்நிலையில் சேகர் ரெட்டியின் கூட்டாளிகளான மகாவீர் இரானி, அசோக் ஜெயின் ஆகிய இருவரையும் அமலாக்கத்துறை கைது செய்துள்ளது. அவர்கள் ரூ.6 கோடி அளவிற்கு பழைய ரூபாய் நோட்டுக்களை மாற்றி தந்தது கண்டுபிடிக்கப்பட்டது. மேலும் அசோக் ஜெயினிடம் இருந்து ரூ.10 கோடி மதிப்பிலான பழைய நோட்டுகள் மற்றும் 6.5 கிலோ தங்கத்தையும் அமலாக்கத்துறை பறிமுதல் செய்ததாக கூறப்படுகிறது. கைதான இருவரும் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். இருவரையும் ஜன.11ம் தேதி வரையில் காவலில் வைக்க நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.