அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சி தலைவர் ஆர்.சரத்குமார் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:- கடந்த மே 24-ந் தேதி முதல்-அமைச்சர் ஜெயலலிதா பதவி ஏற்றவுடன் டாஸ்மாக் கடைகளின் பணி நேரத்தை குறைத்து உத்தரவிட்டார்.
அடுத்த கட்ட நடவடிக்கையாக 500 கடைகளை மூடுவதற்கு உத்தரவிட்டுள்ளார். முதல்-அமைச்சரின் படிப்படியான பூரண மதுவிலக்கு அறிவிப்பை வெறும் கண்துடைப்பு என்று தேர்தல் நேரத்தில் போட்டிப்போட்டுக் கொண்டு பிரசாரம் செய்த எதிர்க்கட்சிகள், 30 நாட்களுக்குள் தமிழகம் முழுவதிலும் உள்ள கடைகளில் 500 கடைகளை தேர்ந்தெடுத்து அவற்றை மூடுவதற்கு உத்தரவு பிறப்பித்து அதனை உடனடியாக அமலுக்கு கொண்டுவந்திருக்கும் முதல்-அமைச்சரின் இந்த செயலை பாராட்ட வேண்டும்.
உடனடி சான்றிதழ்கள் மூலம் கடைகள் மூடப்படுவது ஊர்ஜிதப்படுத்தப்படுவதும், அங்கு பணிபுரிந்தவர்களுக்கு மாற்று பணிக்கான நடவடிக்கைகள் எடுப்பதும் பாராட்டுக்குரியது. இந்த துரித செயல்பாடுகள் முதல்-அமைச்சர் தேர்தல் நேரத்தில் பேசியது போல முதல்-அமைச்சர் ஜெயலலிதா சொன்னதையும் செய்வார், சொல்லாததையும் செய்வார் என்ற பெரும் நம்பிக்கையை மக்களுக்கு தரும். மக்கள் நலன் குறித்த அறிவிப்புகளுக்கு முக்கியத்துவம் கொடுத்து மதுவிலக்கை தமிழகத்தில் நிறைவேற்ற எடுக்கும் நடவடிக்கைகளுக்கு எனது மகிழ்ச்சியையும், பாராட்டுக்களையும் தெரிவித்துகொள்கிறேன். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.