ஜெனிவாவில் சிறிலங்காவுக்கு காத்திருக்கிறது பேரதிர்ச்சி ! – ஆயர் எச்சரிக்கை

“மற்றவர்களின் அறிவுரைகளைக் கேட்காமல் தான் தோன்றித்தனமாகச் செயற்பட்டு வரும்  சிறிலங்கா  அரசுக்கு எதிர்வரும் மார்ச் மாதம் ஜெனிவாவில் பேரதிர்ச்சி காத்திருக்கின்றது” என்று மன்னார் மறை மாவட்ட ஆயர்அதி வணக்கத்துக்குரிய இராயப்பு யோசேப்பு  எச்சரிக்கை விடுத்துள்ளார்.    “தமிழ் மக்களுக்கான சகல உரிமைகளையும் வழங்காவிடின் சர்வதேச சமூகத்தால் சிறிலங்கா அரசு தூக்கியெறியப்படும் காலம் தொலைவில் இல்லை” என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

கடந்தவாரம் கத்தோலிக்க ஆயர் பேரவை விடுத்துள்ள சுற்றுநிரூப ஆவணத்தை சிறிலங்கா அரச தரப்பினரும், சிங்கள இனவாதிகளும் விமர்சிப்பதை நிறுத்திவிட்டு நாட்டின் நலன் கருதி ஆக்கபூர்வமான செயற்பாடுகளை முன்னெடுக்க வேண்டும் என்றும் அவர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.   இது தொடர்பில் நேற்றுத் தெரிவித்ததாவது,   நல்லிணக்க ஆணைக்குழுவின் பரிந்துரைகளை நடைமுறைப்படுத்த வேண்டும், அரசியல் தீர்வைக் காண்பதற்கு அரசானது தமிழ்த் தேசியக் கூட்டமைப்புடன் பேச்சுகளை ஆரம்பிக்கவேண்டும், மனித உரிமை மீறல்கள், உயிர் பறிப்புகள் மற்றும் போர்க்குற்றங்கள் தொடர்பில் நீதியான விசாரணையை உடன் நடத்த வேண்டும், வடக்கு, கிழக்கு மாகாணங்களுக்குரிய  நிர்வாகப் பொறுப்பை தமிழ் மக்களிடம் அளிக்கவேண்டும், அங்கு சிங்களக் குடியேற்றங்களை நிறுத்தவேண்டும், வடக்கு, கிழக்கில் சிவில் ஆளுநர்களை நியமிக்க வேண்டும், தேவையற்ற இராணுவத் தலையீடுகளை நிறுத்த வேண்டும், இடம்பெயர்ந்த மக்களை மீள்குடியேற்ற வேண்டும், தமிழ் அரசியல் கைதிகளை விரைவில் விடுதலை செய்யவேண்டும், இறந்தவர்களை நினைவுகூர அனுமதிக்கவேண்டும், காணாமற்போனோர் தொடர்பில் தீர்வுகாணப்படவேண்டும் என பல முக்கிய விடயங்களை சிறிலங்கா அரசு நடைமுறைப்படுத்தவேண்டும் எனக் கோரி கடந்த வாரம் கத்தோலிக்க ஆயர் பேரவையானது சுற்றுநிரூப ஆவணத்தை வெளியிட்டுள்ளது.   ஆனால், நாட்டின் நலன் கருதி கத்தோலிக்க ஆயர் பேரவை விடுத்துள்ள இந்த ஆவணத்தை இலங்கை அரச தரப்பினரும், சிங்கள இனவாதிகளும் கடுமையாக விமர்சிக்கின்றனர்.

சிறிலங்கா அரசு, மற்றவர்களின் அறிவுரைகளைக் கேட்காது தான்தோன்றித்தனமாகச் செயற்பட்டு வருவதால் எதிர்வரும் மார்ச் மாதம் ஜெனிவாவில் நடைபெறவுள்ள ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் கூட்டத்தொடரில் அதற்கு அதிர்ச்சி காத்திருப்பது உறுதியாகின்றது.    அண்மையில் இலங்கை வந்த ஐ.நா. மனித உரிமை ஆணையாளர் நவநீதம்பிள்ளை, பிரிட்டன் பிரதமர் கமரூன், ஐ.நாவின் விசேட அறிக்கையாளர் பெயானி மற்றும் அமரிக்காவின் உயர்குழுவினர் ஆகியோர் போரால் பாதிக்கப்பட்ட பகுதிகளையும், போரால் பாதிக்கப்பட்ட மற்றும் இடம்பெயர்ந்த தமிழ் மக்களையும், தமிழ் சிவில் சமூகத்தினரையும் நேரடியாகச் சந்தித்து தகவல்களை திரட்டிக்கொண்டு சென்றுள்ளனர்.

எனவே, உள்நாட்டில் நடைபெற்ற மனிதப்படுகொலைகள் தொடர்பில் சர்வதேச சமூகம் ஏற்றுக்கொள்ளக்கூடிய சுயாதீன விசாரணையை நடத்திப் பாதிக்கப்பட்ட தமிழ் மக்களுக்கு தீர்வைப் பெற்றுக்கொடுக்க சிறிலங்கா அரசு உடன் முன்வரவேண்டும்.    இல்லையேல் சர்வதேச விசாரணையை சிறிலங்கா அரசு எதிர்கொண்டே தீரும். அத்துடன் தமிழ் மக்களுக்கான சகல உரிமைகளையும் வழங்கி அவர்கள் சுதந்திரக் காற்றை சுவாசித்து நிம்மதியாக வாழும் சூழ்நிலையை சிறிலங்கா அரசு உடனடியாக  ஏற்படுத்த வேண்டும்  என்று ஆயர் மேலும் தெரிவித்துள்ளார்.

ஆயர்இராயப்பு யோசேப்புகத்தோலிக்க ஆயர்சர்வதேச சமூகம்சிறிலங்கா அரசுசுயாதீன விசாரணைநவநீதம்பிள்ளைபேரவலங்கள்மனித உரிமை மீறல்
Comments (0)
Add Comment