காவிரி விவகாரத்தில் ஜெயலலிதா, சித்தராமையா, உச்சநீதிமன்ற நீதிபதிகள் உள்பட 9 பேர் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி மண்டியா நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. தமிழகத்திற்கு காவிரியில் வினாடிக்கு 15 ஆயிரம் கனஅடி வீதம் 10 நாட்களுக்கு தண்ணீர் திறந்துவிட வேண்டும் என்று உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது.
இந்நிலையில், மண்டியாவை சேர்ந்த ராஜண்ணா என்பவர் மண்டியா நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு ஒன்று தொடந்துள்ளார். அதில் காவிரி பிரச்சினையில் உச்சநீதிமன்றம் 2 மாநிலங்களுக்கும் ஆய்வு குழுவை அனுப்பி நீர் இருப்பு பற்றி ஆய்வு செய்ய உத்தரவிட்டிருக்க வேண்டும் என்று கூறியுள்ளார். மேலும் காவிரி பிரச்சினை தொடர்பாக உத்தரவிட உச்சநீதிமன்றத்திற்கு எந்த அதிகாரமும் இல்லை என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
எனவே தமிழகத்திற்கு தண்ணீர் கேட்டு மனு தாக்கல் செய்த தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா, தண்ணீர் திறந்துவிட்ட கர்நாடக முதல்-மந்திரி சித்தராமையா, தமிழகத்திற்கு தண்ணீர் வழங்க உத்தரவிட்ட உச்சநீதிமன்ற நீதிபதிகள் கே.எஸ்.தாக்கூர், தீபக் மிஸ்ரா, உமேஷ் லலித், தமிழ்நாடு மற்றும் கர்நாடக தலைமை செயலாளர்கள், மத்திய அரசின் நீர்ப்பாசனத்துறை செயலாளர், கர்நாடக நீர்ப்பாசனத்துறை அமைச்சர் எம்.பி.பட்டீல் ஆகிய 9 பேர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என மனுவில் ராஜண்ணா வலியுறுத்தியுள்ளார்.