ஜெயலலிதா மீதான சொத்துக் குவிப்பு வழக்கில், அரசுத் தரப்பு வழக்கறிஞர் பதவியில் இருந்து விலகிவிட்டதாக வெளியான தகவலை பவானிசிங் மறுத்துள்ளார்.
சொத்துக்குவிப்பு வழக்கில் மேல் முறையீட்டு மனு மீதான விசாரணை, கர்நாடக உயர்நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. இதில், லஞ்ச ஒழிப்புத் துறை சார்பில் அரசு வழக்கறிஞராக பவானிசிங் ஆஜராகி வாதாடி வருகிறார்.
இவரது நியமனத்தை எதிர்த்து தி.மு.க பொதுச் செயலாளர் க.அன்பழகன் கர்நாடக உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். அவரது கோரிக்கை மூன்று முறை நிராகரிக்கப்பட்டது.
இந்நிலையில், நேற்று முன்தினம் அரசு வழக்கறிஞர் பவானி சிங், ஊதியக்குறைவு உள்ளிட்ட காரணங்களால், தனது பதவியை ராஜினாமா செய்ததாக தகவல் வெளியானது. இது பற்றி பவானி சிங்கை தொடர்பு கொண்டு கேட்டபோது, அந்தத் தகவலில் உண்மையில்லை என்று கூறினார்.