ஜெயின் தண்டனையை ஏற்றுக்கொள்ளாத 14 பேர் தற்கொலை

சொத்துக்குவிப்பு வழக்கில் ஜெயலலிதாவுக்கு 4 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டு, அவர் சிறையில் அடைக்கப்பட்டதை தாங்க முடியாத வேதனையில் கல்லூரி மாணவி மற்றும் அதிமுகவினர் பலர் தீக்குளித்தனர்.

அதிமுக தலைமை கழகத்தில் நேற்று முன்தினம் திரண்டு நின்ற பெண்கள் தீர்ப்பு வெளியானதும் தலையிலும், மார்பிலும் அடித்து கதறி அழுதார்கள். துக்கம் தாங்காமல் தொண்டர்களும் அழுதனர். வேட்டி தலைப்பாலும், கைக்குட்டையாலும் வடிந்த கண்ணீரை துடைத்த படி அழுதனர். தலைமைக் கழக வளாகம் முழுவதும் சோகமயமாக காட்சியளித்தது.

சென்னை வளசரவாக்கம் அடுத்த ஏ.பி.என்.பிரதாப் நகர் பகுதியை சேர்ந்த வெங்கடேசன் (58) என்பவர் ஜெயலலிதாவுக்கு தண்டனை விதிக்கப்பட்டதை அறிந்து அதிர்ச்சி அடைந்தார்.

உடனே பெற்றோல் கேனை எடுத்துக் கொண்டு நடுரோட்டுக்கு வந்த அவர் “அம்மா வாழ்க!” என்று கூறி தனது உடலில் பெற்றோலை ஊற்றி தீக்குளித்தார். கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர் சிகிச்சை பலனின்றி இறந்தார்.

திருச்சி மாவட்டம் லால்குடி அருகே உள்ள நகர் கிராமத்தை சேர்ந்த ஆரோக்கியதாஸ் மகள் ஜோனஷா (19). லால்குடியில் உள்ள பாரதிதாசன் உறுப்பு கல்லூரியில் பி.ஏ. 2–ம் ஆண்டு படித்து வந்தார்.

ஜெயலலிதாவிற்கு தண்டனை வழங்கியதை அறிந்த ஜோனஷா, ‘எங்களுக்கெல்லாம் இலவச லேப் டாப் கொடுத்தவரை சிறையில் அடைத்து விட்டார்களே’ எனக் கூறி அழுததாகவும், பின்னர் அவர் தூக்குப் போட்டு தற்கொலை செய்து கொண்டதாகவும் கூறப்படுகிறது.

புதுக்கோட்டை மாவட்டம் திருமயம் அருகே உள்ள நெய்வாசல் பகுதியை சேர்ந்த ராஜேந்திரன் (47) மனமுடைந்த நிலையில் காணப்பட்டார். நேற்று அதிகாலை 3 மணியளவில் திடீரென மாரடைப்பு ஏற்பட்டு இறந்தார.

நாகை மாவட்டம், வேதாரண்யம்–நாகை மெயின்ரோட்டில் கோர்ட்டு அருகே வசித்து வருபவர் கோவிந்தராஜ் (56).தீர்ப்பை கேட்டதும் மாரடைப்பில் மயங்கி விழுந்து இறந்தார்.

திண்டுக்கல் மாவட்டம் வத்தலக்குண்டு அருகே உள்ள சேவுகம்பட்டி பேரூராட்சி முத்துலாபுரத்தை சேர்ந்தவர் பாலம்மாள் (52). தீர்ப்பை அறிந்ததும் நெஞ்சுவலி ஏற்பட்டு அதே இடத்தில் உயிரிழந்தார்.

ஈரோடு மாவட்டம் நெரிஞ்சிப்பேட்டையை சேர்ந்த மாரியப்பனும் அதிர்ச்சியில் மயங்கி விழுந்து இறந்தார்.

நெல்லை மாவட்டம் பாவூர் சத்திரம் பிள்ளையார் கோவில் தெருவை சேர்ந்தவர் நாலாயிரம் (48).தென்காசியில் இருந்து நெல்லை நோக்கி வந்த அரசு பஸ் முன்பு பாய்ந்தார்.இதில் அவரது 2 கால்களும் பஸ் சக்கரத்தில் சிக்கி நசுங்கின. இரத்த வெள்ளத்தில் உயிருக்கு போராடியவரை அக்கம் பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி நாலாயிரம் பரிதாபமாக இறந்தார்.

திருவோணம் அருகே உள்ள காட்டாத்தி சித்தன் தெருவை சேர்ந்த பழனியப்பனுக்கு தீர்ப்பை கேட்டு மாரடைப்பு ஏற்பட்டது.இதில் மயங்கி விழுந்த அவர் சிறிது நேரத்தில் பரிதாபமாக இறந்தார்.

கரூர் மாவட்டம் நெடுங்கூர் கிழக்கு கஸ்பா காலனியை சேர்ந்த ராமசாமி (60) மூலக்காட்டனூரை சேர்ந்த அதிமுகவை சேர்ந்த முன்னாள் ஊராட்சி வார்டு செயலாளர் வேலுச்சாமி (50) ஆகியோரும் மாரடைப்பால் மரணம் அடைந்தனர்.

தளவாபாளையத்தை சேர்ந்த ஜீவா என்ற பாக்கியராஜ் (40) என்பவர் தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வருகிறார். நேற்று முன்தினம் காலை முதல் தொலைக்காட்சியில் ஜெயலலிதா தீர்ப்பு குறித்து பார்த்துக்கொண்டிருந்தார். ஜெயலலிதா குற்றவாளி என்ற அறிவிக்கப்பட்டதும் ஜீவாவுக்கு மாரடைப்பு ஏற்பட்டது.சிறிது நேரத்தில் அவர் இறந்தார்.

சிங்கம்புணரி அருகே உள்ள காளாப்பூரைச் சேர்ந்தவர் சுப்பிரமணியன் (70). அதிமுக தொண்டர்.தீர்ப்பு வெளியானதும் விஷம் குடித்தார். சிகிச்சைக்காக மதுரை அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்ட அவர் பரிதாபமாக இறந்தார்.

ஈரோடு அடுத்த மொடக்குறிச்சி அருகே லக்காபுரம் நெல்லுகுத்து காடு பகுதியை சேர்ந்தவர் லட்சுமணன் (40). தறிபட்டறை தொழிலாளி. இவருக்கு மனைவியும், ஒரு மகனும், ஒரு மகளும் உள்ளனர்.

ஜெயலலிதாவுக்கு பெங்களூர் கோர்ட்டில் ஜெயில் தண்டனை விதிக்கப்பட்ட தகவல் லட்சுமணனுக்கு கிடைத்தது.இதனால் அவர் கடும் அதிர்ச்சி அடைந்து விரக்தியில் இருந்து வந்தார். அனைவரிடமும் இதை சொல்லி புலம்பி கதறி அழுது கொண்டே இருந்தார்.

பின்னர் வீட்டுக்கு சென்ற அவர் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

சேலம் ஓமலூர் அருகில் உள்ள மோரூர் கே.எம்.புதூரை சேர்ந்தவர் ஜேக்கப் என்கிற பழனிச்சாமி (42).டி.வி. பார்த்து கொண்டிருந்தார். அப்போது ஜெயலலிதாவிற்கு 4 ஆண்டுகள் சிறை தண்டனை வழங்கப்பட்டதை பார்த்து பழனிச்சாமி கதறி அழுதார்.

இரவு 8 மணி அளவில் பழனிச்சாமிக்கு திடீரென மாரடைப்பு ஏற்பட்டது. உடனே அவரை பொம்மிடியில் உள்ள ஆஸ்பத்திரிக்கு உறவினர்கள் அழைத்து சென்றனர். இங்கு அவர் இரவு 11 மணி அளவில் இறந்து விட்டார்.

இதுவரை 14 பேர் இதுபோன்று உயிரிழந்துள்ளனர்

அரசுகல்லூரிகுவிப்புசிறைசொத்துக்ஜெயலலிதாதண்டனைதற்கொலைதீக்குளிப்புதீர்ப்புபெண்கள்பெற்றோல்மருத்துவமனைமாணிவவளசரவாக்கம்வழக்கு
Comments (0)
Add Comment