தலைநகர் டெல்லியில் தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தக்கூடும் என உளவுத்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது. ஜம்மு காஷ்மீரில் சம்பா ராணுவ முகாமில் நடத்தப்பட்டதை போன்று டெல்லியில் ஜெய்ஷ்-இ-முகமது இயகத்தினர் தாக்குதல் நடத்த திட்டமிட்டிருப்பதாக உளவுத் துறை தகவல்களை வைத்து மத்திய பாதுகாப்பு முகமை, டெல்லி போலீசாருக்கு எச்சரிக்கை விடுத்திருக்கிறது.
டெல்லியில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு மூத்த காவல்துறை அதிகாரிகள் மற்றும் காவல் துணை ஆணையர்கள் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர். அசம்பாவிதங்களை தவிர்க்க அனைத்து வகையான பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்யுமாறு டெல்லி போலீசார் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
கடந்த மாதம் 20 மற்றும் 21-ம் தேதிகளில் ஜம்மு காஷ்மீரில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதல்களில் பாதுகாப்பு படை வீரர்கள் மூவர் உட்பட 5 பேர் உயரிழந்தனர். தாக்குதல் நடத்திய 4 தீவிரவாதிகளும் கொல்லப்பட்டனர்.