ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியைப் பிளவுபடுத்துவதற்கான சதிமுயற்சியொன்றில் தான் ஈடுபட்டிருப்பதாகக் கூறப்படுவதை வடமாகாணத்தின் முன்னாள் ஆளுநர் றெஜினோல்ட் குரே மறுத்துள்ளார்.
ஊடகங்களுக்கு விடுத்திருக்கும் அறிக்கையொன்றில் அவர் இதனை வெளிப்படுத்தியுள்ளார்.
அதோடு தன்னால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த கூட்டத்தைப; பற்றி ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்குத் தெரியும் என்று குறிப்பிட்டிருக்கிறார்.
ஒன்பது மாகாணங்களில் ஐந்து மாகாணங்களுக்கு புதிய ஆளுநர்களை நியமித்த ஜனாதிபதி சிறிசேன கடந்த டிசம்பர் 31 வரை வடமாகாண ஆளுநராகப் பதவிவகித்த குரேயைத் தவிர்த்திருந்தார்.
இந்நிலையில் தலைமைத்துவத்துக்கு எதிரான செயற்பாடுகளுக்கு அனுசரணையாக குரே இயங்குவதாக கட்சியின் அமைப்பாளர்கள் குழுவொன்றினால் தெரிவிக்கப்பட்ட கருத்துகளுக்குப் பதிலளிக்குமுகமாகவே அவர் இந்த அறிக்கையை வெளியிட்டிருந்தார்.
அதோடு தான் மௌனமாக இருப்பதை பயன்படுத்தி பல பொய்கள் கட்டவிழ்த்துவிடப்படுகின்றதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
த்னது வளாகத்தில் இடம்பெற்ற கூட்டம் எந்தவொரு சதித்திட்டத்தையும் தீட்டுவதற்கு பயன்படுத்தப்படுவதற்கு தான் அனுமதிக்கவில்லை என்பதை திட்டவட்டமாகக் கூறுவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
மேலும் முன்னாள் ஜனாதிபதி திருமதி சந்திரிகா குமாரதுங்கவுடன் எந்த தொடர்பையும் கொண்டிருக்கவில்லை என்று கூறிய குரே, எந்தச் சூழ்நிலையிலும் சுதந்திரக் கட்சியை விட்டு விலகப்போவதில்லை என்றும் கூறியுள்ளமை குறிப்பிடத்தக்கது.