இலங்கை தமிழர் ஒருவருக்கு கொலை மிரட்டல் விடுத்துவிட்டு துப்பாக்கியுடன் சென்றவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று காவல்துறைக்கு சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி உத்தரவிட்டார். சென்னை கிழக்கு கடற்கரைச் சாலையில் உள்ள கண்டிகை பகுதியைச் சேர்ந்த இலங்கைத் தமிழர் செந்தூரன் என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு ஒன்றை தாக்கல் செய்தார்.
அதில், தான் தங்கியிருந்த அடுக்குமாடி குடியிருப்பு நிர்வாகத்திற்கும் தனக்கும் பிரச்சினை ஏற்பட்டதால் தனது வீட்டிற்கு துப்பாக்கியுடன் வந்த மர்ம நபர்கள் தனக்கு கொலை மிரட்டல் விடுத்ததாக தெரிவித்துள்ளார். இதற்கு காவல்துறை உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் அவர் மனுவில் கோரியிருந்தார். இந்த மனு, நீதிபதி பி.என் பிரகாஷ் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது செந்தூரனின் வீட்டிற்கு துப்பாக்கியோடு வந்து சென்ற மர்ம நபர்களின் கண்காணிப்புக் கேமரா காட்சிகளைக் கண்ட நீதிபதி, மர்ம நபர்களைக் கண்டுபிடிக்க காவல்துறையினருக்கு உத்தரவிட்டனர்.