தமிழக சட்டசபை தேர்தலுக்கு இன்னும் 3 மாதங்களே உள்ளதால் ஒவ்வொரு கட்சியும் கூட்டணி பேச்சுவார்த்தையில் இறங்கி உள்ளது. பாரதீய ஜனதா கட்சி சார்பில் கூட்டணி பற்றி பேச 3 பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டுள்ளது. இதில் இல.கணேசன், எச்.ராஜா, வானதி சீனிவாசன் ஆகியோர் இடம் பெற்றுள்ளனர். பாராளுமன்ற தேர்தலின் போது, பாரதீய ஜனதா தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியில் இடம் பெற்றிருந்த கட்சிகளை இந்த சட்டமன்ற தேர்தலிலும் கூட்டணியில் இடம் பெற செய்ய மூவர் குழு பேச்சு வார்த்தையை தொடங்கி உள்ளது.
கடந்த வாரம் இந்திய ஜனநாயக கட்சித் தலைவர் பாரிவேந்தருடன் இவர்கள் சந்தித்து பேச்சு நடத்தினார்கள். இதே போல் இந்திய முஸ்லீம் முன்னேற்ற கழக தலைவர் சதக்கத்துல்லாவுடனும் பேச்சு வார்த்தை நடந்தது. இன்று காலை புதிய நீதிக்கட்சித் தலைவர் ஏ.சி. சண்முகத்தை அண்ணா நகரில் உள்ள அவரது வீட்டில் பாரதீய ஜனதா மூத்த தலைவர் இல.கணேசன், எச்.ராஜா, வானிதி சீனிவாசன் ஆகியோர் சென்று சந்தித்து பேச்சு வார்த்தை நடத்தினார்கள். சட்டசபை தேர்தலிலும் தேசிய ஜனநாயக கூட்டணியில் புதிய நீதிக்கட்சி இடம் பெற வேண்டும் என்று வலியுறுத்தினார்கள். அப்போது ஏ.சி.சண்முகம் தேசிய ஜனநாயக கூட்டணியில் இணைந்து பணியாற்ற உறுதி அளித்தார்.