தமிழகத்தில் 45 நாட்கள் மீன்பிடி தடை காலத்தை தொடர்ந்து விசைப்படகுகள் மீன்பிடிக்க செல்லவில்லை. நாட்டுப்படகுகள் மட்டும் மீன்பிடிக்க கடலுக்குச் சென்றுவருகின்றன.
இந்த நிலையில் ராமநாதபுரம் மாவட்டம் பாம்பனில் இருந்து நேற்று (20) சுமார் 70 நாட்டுப்படகுகளில் மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்க சென்றனர். இவர்கள் கச்சத்தீவு அருகே மீன்பிடித்தபோது 2 ரோந்து படகுகளில் சிறிலங்கா கடற்படையினர் ரோந்து வந்தனர். அவர்கள் அங்கு மீன்பிடித்துக்கொண்டு இருந்த நாட்டுப்படகுகளை அந்த இடத்தில் இருந்து செல்லுமாறு எச்சரிக்கை செய்தனர்.
மேலும் ஒரு படகில் இறங்கி அதில் இருந்த 5 மீனவர்களை தாக்கியதோடு, மீன்பிடி வலையை தீ வைத்து எரிக்க முயன்றார்கள். இதையடுத்து சிறிலங்கா கடற்படையினரிடம் 5 மீனவர்களும் இனிமேல் இங்கு வரமாட்டோம் என்று கூறியதைத் தொடர்ந்து அவர்கள் எச்சரிக்கை செய்துவிட்டு அங்கிருந்து சென்றார்கள். அதன்பின் மீனவர்கள் அங்கிருந்து கரை திரும்பினர்.