முல்லைத்தீவு மாவட்டத்தில் முல்லைத்தீவு, புதுக்குடியிருப்பு பொலிஸ் நிலையங்கள் தவிர்ந்த ஏனைய பொலிஸ் நிலையங்களில் தமிழ் மொழி தெரிந்த பொலிஸ் உத்தியோகத்தர்கள் இல்லை என விசனம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதன் காரணமாக பொலிஸ் நிலையங்களிற்கு செல்லும் மக்கள் சிரமங்களை எதிர்கொள்கின்றனர்.
குறிப்பாக பெண்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகளை பொலிஸாரிடம் முறைப்பாடு செய்துகொள்ள முடியாத நிலை காணப்படுவதாக அப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர்.
இதேவேளை அண்மையில் 33 தமிழ் பெண் பொலிஸார் பயிற்சி நிறைவுற்று வெளியேறியுள்ள நிலையிலும் இவ்வாறான குறித்த பொலிஸ் நிலையங்களில் அவர்கள் நியமிக்கப்படவில்லை.
சில பெண் பொலிஸ் உத்தியோகத்தர்கள் பொலிஸ் நிலையங்களில் கடமையாற்றுகின்ற போதிலும், அவர்களிற்கு தமிழ் மொழி தெரியவில்லை எனவும் மக்கள் தெரிவிக்கின்றனர்.
நீண்டகாலமாக அங்கு நிலவிவரும் குறித்த பிரச்சினையை தீர்ப்பதற்கு அப்பகுதி நாடாளுமன்ற உறுப்பினர் சாந்தி சிறிஸ்காந்தராஜாவிடம் பலமுறை கூறியும் அதற்கான எந்தவொரு முயற்சியும் அவர் மேற்கொள்ளவில்லையென மக்கள் விசனம் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.