திரையுலக பிரபலங்கள் பலரும் மாணவர்களின் போராட்டத்திற்கு முழு ஆதரவுடன் செயல்பட்டு வருகின்றனர். தென்னிந்திய நடிகர் சங்கம் சார்பில் நாளை மவுன-உண்ணாவிரத போராட்டத்திற்கும் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.
இந்நிலையில், பிரபல இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமான் ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக உண்ணாவிரதம் இருக்கப்போவதாக அறிவித்தார்.
இதையடுத்து, சென்னையில் உள்ள தனது வீட்டில் நேற்று அதிகாலையில் இருந்து மகன் அமீன், இசை அமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ் மற்றும் குடும்பத்தாருடன் காலையில் இருந்து நோன்பு என்னும் உண்ணாநிலையை கடைபிடித்த ஏ.ஆர்.ரஹ்மான், நோன்புக்கு இடையில் ‘ரோஜா’ படத்தில் இடம்பெற்ற ‘தமிழா, தமிழா கண்கள் கலங்காதே – விடியும், விடியும் உள்ளம் மயங்காதே’ பாடலின் சில வரிகளை தனது குரலில் பாடி டுவிட்டரில் வெளியிட்டார்.
மாலை 6.14 மணியளவில் ஜி.வி.பிரகாஷ், மகன் அமீன் ஆகியோருடன் மாலை தண்ணீர் அருந்தி நோன்பை நிறைவு செய்த காட்சியையும் அவர் தனது சமூக வலைத்தளப் பக்கங்களில் பதிவேற்றம் செய்துள்ளார்.