ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி மற்றும் ஐக்கிய தேசிய கட்சி கூட்டணியில் உருவாக்கப்பட்ட அரசாங்கத்தை தேசிய அரசாங்கமாக கருத முடியாது என தீர்ப்பளிக்குமாறு கோரி ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சரத் விரசேகரவினால் மனு ஒன்று தாக்கல் செய்யப்பட்டது.
அரசியல் யாப்பின் 19 ஆவது திருத்தத்தின்படி, நாடாளுமன்றத்தை பிரதிநித்துவப்படுத்தும் அனைத்து கட்சிகளும் ஒன்று சேர்ந்து ஸ்தாபிக்கப்படும் அரசாங்கத்திற்கே தேசிய அராசங்கம் என்று கூறப்படுவதாக இந்த மனுவில் தெரிவிக்கப்பட்டது.
ஆனால் ஐக்கிய தேசிய கட்சி மற்றும் ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சி ஆகிய இரு கட்சிகள் இணைந்து உருவாக்கப்பட்டுள்ள அரசாங்கத்திற்கு தேசிய அரசாங்கம் என்று குறிப்பிட முடியாது என தீர்ப்பளிக்குமாறு முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சரத் விரசேகர தனது மனுவில் வலியுறுத்தியிருந்தார்.
இந்த மனு நேற்று உச்ச நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது. இதன்போது அமைச்சரவையின் அங்கத்தவர்கள் சார்பில் முன்னிலையான சட்டத்தரணி இந்த ஆட்சேபனையை முன்வைத்தார்.
தற்போதைய தேசிய அரசாங்கம் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானம் ஒன்றின் முலம் ஸ்தாபிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்த சட்டத்தரணி, நாடாளுமன்ற தீர்மானம் தொடர்பாக ஆராய்வதற்கு உச்ச நீதிமன்றத்திற்கு அதிகாரங்கள் இல்லை என்று தெரிவித்தார்.
இதனால் குறித்த மனுவை தள்ளுபடி செய்யுமாறும் அவர் கேட்டுக்கொண்டார். இதனையடுத்து குறித்த ஆட்சேபனை தொடர்பாக ஏதிர்வரும் 3 ஆம் திகதி ஆராயப்படுமென்று நீதிபதி அறிவித்துள்ளார்.