இலங்கையில் தேசிய நல்லிணக்க கொள்கை வரைவில் தான் புறக்கணிக்கப்பட்டுள்ளதாக தேசிய கலந்துரையாடல்கள், சக வாழ்வு மற்றும் அரச கரும மொழிகள் அமைச்சர் மனோ கணேசன் தெரிவித்துள்ளார். சர்வதேச ஊடகமொன்றுக்கு அளித்த நேர்காணலிலேயே அவர் இதனைத் தெரிவித்துள்ளார் குறித்த விடயம் தொடர்பாக பிரதமரை சந்தித்த போது அடுத்த ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தில் தனது அமைச்சுக்கான நிதி குறைப்பு தொடர்பாகவும் அவரது கவனத்திற்கு கொண்டு வந்துள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.
மேலும் இந்த விடயங்கள் தொடர்பில் தான் ஓரிரு வாரங்களாக அரசின் மீது அதிருப்தியடைந்திருப்பதாவும் அமைச்சர் குறிப்பிட்டுள்ளார். அடுத்த ஆண்டு வரவு – செலவுத் திட்டத்தில் தனது அமைச்சுக்குரிய நிதியில் 50 சதவீதம் வெட்டு ஏற்பட்டுள்ளது என்றும் தெரிவித்துள்ளார். தேசிய நல்லிணக்க கொள்கை தொடர்பான யோசனை வரைவு அண்மையில் அமைச்சரவை பத்திரத்தில் இடம் பெற்றிருந்த போதிலும், தான் தெரிவித்த ஆட்சேபனை காரணமாக ஜனாதிபதி அந்த பத்திரத்தை ஒத்திவைத்ததாக அவர் கூறியுள்ளார்.
தனது அமைச்சுக்கு சர்வதேச நாடுகள் மற்றும் அமைப்புகள் வழங்கும் நிதியுதவிகளை கருத்தில் கொண்டு திறைசேரி வழியாக கிடைக்கும் நிதியை குறைப்பது ஏற்றுக் கொள்ள முடியாது என்றுள்ளார். இந்த விடயங்கள் தொடர்பாக பிரதம மந்திரியின் கவனத்திற்கு கொண்டு வரப்பட்ட போது தான் இந்த விவகாரங்களை நேரடியாக கையாண்டு உரிய தீர்வை பெற்றுத்தருவதாக அவர் உறுதி வழங்கியதாகவும் மனோ கணேசன் குறிப்பிட்டுள்ளார்.