படுக்கை வசதியுடன் கூடிய 2ஆம் வகுப்பு பயணச்சீட்டு ரத்து செய்யப்பட்டால் இனி 60 ரூபாய் பிடிக்கப்படும். ரயில் புறப்பட்டுச் சென்ற பின்னர் முன்பதிவு டிக்கெட்டை இனி ரத்து செய்ய முடியாது. ஆர்.ஏ.சி டிக்கெட்டுகளை பொறுத்தவரை, ரயில் புறப்படுவதற்கு முப்பது நிமிடத்திற்கு முன்பு ரத்து செய்யலாம் – அதன்பிறகு ரத்து செய்ய முடியாது. இந்த நடைமுறை வரும் 12ஆம் தேதி அமலுக்கு வருகிறது.
அதேபோல, மூன்றடுக்கு ஏசி பெட்டிகளுக்கான டிக்கெட்டுக்கு தற்போது பிடித்தம் செய்யப்படும் தொகை ரூ.90-இல் இருந்து ரூ.180-ஆக அதிகரிக்கப்பட உள்ளது. இரண்டாம் வகுப்பு படுக்கை வசதி கொண்ட பெட்டிகளுக்கு இத்தொகை ரூ.60-இல் இருந்து ரூ.120-ஆகவும், இரண்டடுக்கு ஏசி பெட்டிகளுக்கு ரூ.100-இல் இருந்து ரூ.200-ஆகவும் அதிகரிக்கப்பட உள்ளது.
ரயில் புறப்படுவதற்கு 48 மணிநேரத்தில் இருந்து 6 மணி நேரத்துக்கு முன்பாக டிக்கெட்டை ரத்து செய்யும்போது, டிக்கெட்டின் 25 சதவீத தொகை தற்போது வசூலிக்கப்படுகிறது. புதிய விதிமுறைகளின்படி, 6 மணிநேரம் என்பது 12 மணிநேரமாக மாற்றியமைக்கப்பட உள்ளது.
ரயில் புறப்படுவதற்கு 6 மணி நேரத்தில் இருந்து ரயில் புறப்பட்ட 2 மணிநேரத்துக்குள் டிக்கெட்டை ரத்து செய்யும்போது, டிக்கெட்டின் 50 சதவீத தொகை தற்போது பிடித்தம் செய்யப்படுகிறது. இனி, ரயில் புறப்படுவதற்கு 4 மணிநேரத்துக்கு முன்பாக ரத்து செய்தால் மட்டுமே 50 சதவீத பணம் திருப்பியளிக்கப்படும். அதன்பிறகு ரத்து செய்தால் பணம் திருப்பியளிக்கப்படமாட்டாது.