யாழ்.பலாலி விமான நிலையத்தை இந்தியாவின் உதவியுடன் பிராந்திய விமான நிலையமாக அபிவிருத்தி செய்வது தொடர்பாக எதிர்வரும் யூலை- 10 ஆம் திகதி பலாலி சென்று ஆராயவுள்ளதாக பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.
அலரி மாளிகையில் நேற்றையதினம் தமிழ்தேசிய கூட்டமைப்பினரை சந்தித்தபோதே அவர் இதனை கூறியுள்ளார்.
அங்கு இடம்பெற்ற வடக்கு அபிவிருத்தி தொடர்பான சிறப்புக் கூட்டத்தில் பலாலி விமான நிலையத்தைப் பிராந்திய விமான நிலையமாகத் தரமுயர்த்துவது மற்றும் அதற்குத் தேவையான காணிகள் தவிர்ந்த ஏனைய காணிகளை விடுவிப்பது தொடர்பாக ஆராயப்பட்டுள்ளது..
அதோடு இந்த விடயத்தில் விரைவாக முடிவெடுக்கப்பட வேண்டுமெனத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு சார்பில் கலந்து கொண்ட நாடாளுமன்ற உறுப்பினர்கள் வலியுறுத்தியுள்ள்ளனர்
இதனையடுத்து எதிர்வரும் யூலை- 10ஆம் திகதி தாம் யாழ்ப்பாணம் வரும் போது, இந்தியத் தூதுவர் தரன்ஜித் சிங்கும் அங்கு வருவார் எனவும்,
இருவரும் இணைந்து பலாலி விமான நிலையத்தை நேரில் பார்வையிட்டு அதனை அபிவிருத்தி செய்வது குறித்த திட்டங்களை இறுதி செய்வதாகவும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க உறுதியளித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது..