சென்னையில் சிக்கிய ஐஎஸ்ஐ உளவாளி அருண் செல்வராசன், தன் காதலியை உளவாளியாக பயன்படுத்தி, போட்டோ மற்றும் தகவல்கள் சேகரித்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. இதனால், அந்த பெண்ணை பிடிக்க போலீசார் தீவிரம் காட்டி வருகின்றனர். சென்னை சாலிகிராமத்தில் கடந்த 10ம் தேதி இரவு கைது செய்யப்பட்ட பாகிஸ்தான் உளவாளி அருண் செல்வராசன் பற்றி திடுக்கிடும் தகவல்கள் வெளிவந்த வண்ணம் உள்ளது. தமிழகம் விஷயத்தில் மட்டும் ஏன் இலங்கை தமிழரை ஐஎஸ்ஐ அமைப்பு தேர்வு செய்தது என்பது குறித்து பரபரப்பான தகவல்கள் வெளியாகி உள்ளது.
குறிப்பாக, பாகிஸ்தான் உளவு அமைப்பின் புதிய திட்டத்தின்படி, ஒவ்வொரு மாநிலத்திலும் உள்ள மொழிகளை நன்றாக அறிந்தவர்களையே பயன்படுத்த திட்டமிட்டுள்ள தகவல் வெளியாகி உள்ளது. அதன்படி இந்தியாவின் பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்தவர்களையே உளவு அமைப்புக்கு பயன்படுத்த திட்டமிட்டுள்ளதாகவும், அப்போதுதான் இந்தியாவில் யாருக்கும் சந்தேகம் வராது என்றும் தேசிய புலனாய்வு அமைப்பிடம் செல்வராசன் கூறியுள்ளார். அந்த வகையில்தான், தமிழகத்தை நன்கு அறிந்த இலங்கை தமிழரான செல்வராசன் தேர்வும் நடந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
யார் இந்த செல்வராசன்?
சென்னை ராயபுரத்தில் உள்ள பள்ளியில் 7 முதல் 9ம் வகுப்பு வரை படித்துள்ளார். பின்னர், இலங்கைக்கு சென்று விட்டார். இலங்கையில் ரூ1 கோடி செலவில் அட்லாண்டிக் என்ற பெயரில் ஓட்டல் தொடங்கியுள்ளார். அதில் நஷ்டம் ஏற்படவே சாய்ராஜ சிங்கம் என்ற இலங்கை தமிழருடன் சேர்ந்து மேற்கு ஆப்ரிக்க நாட்டின் லைபீரியாவில் 2007ம் ஆண்டு, ஓட்டல் ஒன்றை ரூ1 கோடியே 20 லட்சம் செலவில் தொடங்கி நடத்தியுள்ளார். இதிலும் ரூ 70 லட்சம் வரை நஷ்டம் ஏற்பட்டது. எனவே, 2008ல் இலங்கை திரும்பிய அருண் தினமும் மது அருந்துவது, சூதாட்டத்தில் ஈடுபடுவதுமாக இருந்துள்ளார். அப்போது வினித் என்கிற ஆட்டோ டிரைவர் அறிமுகமாகியுள்ளான். சிறிது நாள் பழக்கத்தில் இருவரும் நெருக்கமாகி விட்டனர்.
அருணின் நிலைமையை பார்த்த வினித் தமிழகம் பற்றி அருண் நன்றாக தெரிந்து வைத்திருப்பதால் தனக்கு தெரிந்த ஒருவருக்கு சென்னையில் தங்கியிருந்து பிஆர்ஓ வேலை பார்க்க சொல்லி இருக்கிறான். சென்னையில் இருந்து செய்திகள், புகைப்படங்கள் அனுப்பும்படி அதற்கு நிறைய பணம் தருவதாகவும் கூறியுள்ளான். இதன் படி லட்சக்கணக்கான ரூபாயுடன் சென்னைக்கு 2008 மே மாதம் வந்தார் அருண். சென்னையில் இருந்து புகைப்படங்கள், செய்திகளை சேகரித்து அனுப்பி வந்துள் ளார். இதன்பின், மீண்டும் இலங்கை சென்ற அருணை பாகிஸ்தான் தூதரகத்துக்கு வினித் அழைத்து சென்று, அங்குள்ள அதிகாரி ஜியாவிடம் அறிமுகப்படுத்தியுள்ளான். அதன்பின்னர், அருணை உளவாளியாக வேலை செய்ய அணுகினர்.
இதற்காக, பாகிஸ்தானிலிருந்து தோல் இறக்குமதி செய்து தருவதாகவும். அதை வைத்து வியாபாரம் செய்து கோடிக்கணக்கில் சம்பாதித்து கொண்டே உளவு வேலையை பார்க்க வேண்டும். இதன் மூலம், போலீசாரிடம் சிக்காமல் இருக்கலாம். குறிப்பாக பணக்காரர்களிடம் அதிகம் தொடர்பு ஏற்படுத்தும் தொழிலாக இருக்க வேண்டும் என்று சில தொழில்களின் பெயர்களை கூறியுள்ளனர். அதில் அவர் தேர்வு செய்ததுதான் ஈவன்ட்மேனேஜ்மென்ட். சென்னையில் அருண் வாழ்ந்த ஆடம்பர வாழ்க்கையில் அவனுக்கு பல ஆண், பெண் நண்பர்கள் இருந்துள்ளனர். இதில் சென்னையை சேர்ந்த பெண் காதலி ஒருவர் இருப்பதாக கூறியுள்ளார். அந்த பெண் மூலமும் பல விவரங்களையும், படங்களையும் எடுத்துள்ளதாக தெரிவித்துள்ளார். பப், நைட் கிளப் என வளம் வரும் அந்த காதலியிடம் விசாரணை நடத்தினால் பல விபரங்கள் கிடைக்கும் என்ற முடிவுக்கு அதிகாரிகள் வந்துள்ளனர். இது தவிர பேஸ் புக், ஆடம்பர விடுதி நண்பர்கள், தொழில் சார்ந்த நண்பர்களை விசாரிக்கவும் முடிவு செய்துள்ளனர்.