இலங்கைக்கு விஜயம் மேற்கொண்ட ஐக்கிய நாடுகள் சபையின் செயலாளர் நாயகம் பான் கீ மூன் இலங்கையின் சுயாதீன தன்மை மற்றும் இறைமையை மீறும் வகையிலும் பாரதுரமான கருத்துக்களையும் வெளியிட்டுள்ளார். எனவே பான் கீ மூனின் இறைமையை மீறும் கூற்றுக்களுக்கு அரசாங்கத்தின் பதிலை கோரி இன்று செவ்வாய்க்கிழமை (06/09/2016) பாராளுமன்றத்தில் சபை ஒத்திவைப்பு வேளை பிரேரணையை கொண்டுவரவுள்ளோம் என்று கூட்டு எதிரணியின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான தினேஷ் குணவர்த்தன தெரிவித்தார்.
சபை ஒத்திவைப்பு வேளை விவாதம் தொடர்பில் நாம் முன்வைத்த கோரிக்கை ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளது. எனவே பான் கீ மூனின் கூற்றுக்கள் தொடர்பில் அரசாங்கததின் பதிலை இன்று எதிர்பார்க்கின்றோம் என்றும் அவர் குறிப்பிட்டார். இது தொடர்பில் கூட்டு எதிரணியின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான தினேஷ் குணவர்த்தன மேலும் குறிப்பிடுகையில் இலங்கைக்கு விஜயம் மேற்கொண்ட ஐக்கிய நாடுகள் சபையின் செயலாளர் நாயகம் பான் கீ மூன் இலங்கைக்கு பாதகமான பல்வேறு கருத்துக்களை வெளியிட்டுள்ளார். குறிப்பாக இலங்கையின் சுயாதீன தன்மை மற்றும் இறைமையை மீறும் வகையிலும் பாரதுரமான கருத்துக்களையும் பான் கீ மூன் வெளியிட்டுள்ளார். இதனை ஒருபோதும் அனுமதிக்க முடியாது.
பான் கீ மூன் என்பவர் இந்த நாட்டின் ஜனாதிபதியோ பிரதமரோ அல்ல. நாங்கள் ஐக்கிய நாடுகள் சபையின் கீழ் வருகின்ற நாடும் அல்ல. இலங்கை என்பது சுயாதீனமான இறைமையுள்ள நாடாகும். அதனை யாராலும் கேள்விக்குட்படுத்த முடியாது. இந்நிலையில் இலங்கைக்கு வந்து இராணுவ முகாம்களை அகற்றுமாறும் இராணுவத்தை குறைக்குமாறும் பான் கீ மூன் கூற முடியாது. அத்துடன் பான் கீ மூன் சர்வதேச பங்களிப்பு குறித்தும் பேசியுள்ளார். அதாவது குறிப்பிட்டசில சர்வதேச தலையீடு தொடர்பில் அரசா்ஙகத்துக்கும் ஐக்கிய நாடுகளுக்கும் இடையில் இணக்கப்பாடு எட்டப்பட்டுள்ளதாக பான் கீ மூன் கூறியுள்ளார்.
அவர் காதில் பூ சுற்ற பார்க்கின்றார். பான் கீ மூன் இந்தியாவின் காஷ்மீருக்கு சென்று இவ்வாறு இராணுவ முகாம்களை அகற்றுமாறு கோருவாரா? இலங்கை காலணித்துவ நாடு அல்ல. சுயாதீனமான நாடு. எமது விடயங்களில் யாரும் தலையிட முடியாது. எனவே பான் கீ மூனின் இறைமையை மீறும் கூற்றுக்களுக்கு அரசாங்கத்தின் பதிலை கோரி இன்று ( செவ்வாய்க்கிழமை) பாராளுமன்றத்தில் சபை ஒத்திவைப்பு வேளை பிரேரணையை கொண்டுவரவுள்ளோம். சபை ஒத்திவைப்பு வேளை விவாதம் தொடர்பில் நாம் முன்வைத்த கோரிக்கை ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளது. எனவே பான் கீ மூனின் கூற்றுக்கள் தொடர்பில் அரசாங்கததின் பதிலை இன்று எதிர்பார்க்கின்றோம் என்றார்.